ப்ரீடம் 251... 30,000 பேரிடம் வசூலித்த பணத்தைத் திருப்பித்தர ரிங்கிங்பெல்ஸ் முடிவு
டெல்லி: ப்ரீடம் 251 ஸ்மார்ட் போனுக்காக பணம் வசூலிக்கப்பட்ட, 30 ஆயிரம் பேரிடம் பணத்தை திரும்பத்தர ரிங்கிங்பெல்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
உலகிலேயே மிகக் குறைந்த விலைக்கு, அதாவது ரூ. 251க்கு, ப்ரீடம் 251 என்ற பெயரில் ஸ்மார்ட்போன் வழங்க இருப்பதாக, நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘ரிங்கிங்பெல்ஸ்' நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.
இதற்கென பிரத்யேகமாக இணையதளம் ஒன்றும் தொடங்கப்பட்டது. மிகக்குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் வாங்கும் இந்தத் திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
முடங்கிய இணையதளம்...
ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த இணையதள முகவரியில் ப்ரீடம் 251 போனுக்காக பதிவு செய்ய ஏராளமானோர் ஒரே சமயத்தில் முயன்றனர். இதனால் இணையதளமே முடங்கியது. பின்னர் ஒரு நாள் இடைவெளிக்குப்பின் அந்த நிறுவனத்தின் இணையதளம் சீரானது.
முன்பதிவு...
லட்சக்கணக்கானவர்கள் இந்த ஸ்மார்ட் போனுக்காக பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு பணம் செலுத்துவதற்கான விவரம் அடங்கிய ‘லிங்க்' 48 மணி நேரத்தில், அவர்கள் வழங்கியிருந்த ஈ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் இது தொடர்பாக யாருக்கும் இதுவரை தகவல் வரவில்லை.
நூதன மோசடி...
இதற்கிடையே, இவ்வளவு குறைவான விலையில் ஸ்மார்ட்போன் வழங்குவது சாத்தியமில்லை. இது ஒரு மோசடி என்ற சர்ச்சையும் முளைத்தது.
கேஷ் ஆன் டெலிவரி...
இந்நிலையில் ஸ்மார்ட்போன் வாங்க பதிவு செய்திருந்தவர்கள், முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டாம் எனவும், போன் கையில் கிடைக்கும் போது பணம் செலுத்தினால் போதும் (கேஷ் ஆன் டெலிவரி) எனவும் ரிங்கிங்பெல்ஸ் நிறுவன தலைவர் அசோக் சத்தா அறிவித்துள்ளார்.
திருப்பித்தர முடிவு...
மேலும், ப்ரீடம் 251 போன் இணையதளம் முடங்குவதற்குள் சுமார் 30 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியிருந்தனர். அவர்களது பணம் திருப்பி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.