ராகிங் கொடுமையால் பி.ஆர்க். மாணவி தற்கொலை: டைரியில் பரபரப்பு வாக்குமூலம்
குண்டூர்: ஆந்திராவில் சீனியர்களின் ராகிங் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்த பி.ஆர்க். மாணவி எழுதிய இரண்டாவது டைரி கிடைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஆச்சார்யா நாகர்ஜுனா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க். படித்து வந்தவர் ரிஷிதேஸ்வரி(18). அவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் அவர் சீனியர்களின் ராகிங் கொடுமையை தாங்க முடியாமல் கடந்த மாதம் 21ம் தேதி விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சீனியர்களின் ராகிங் கொடுமையை தாங்க முடியாமல் இந்த முடிவை எடுப்பதாக அவர் எழுதி வைத்திருந்த டைரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் மேலும் ஒரு டைரி கிடைத்துள்ளது. இந்த டைரி வாரங்காலில் உள்ள அவரது வீட்டில் கிடைத்துள்ளது.
அதில் அவர் தன்னை ராகிங் செய்தவர்களின் பெயர்கள், சம்பவம் பற்றி விரிவாக எழுதியுள்ளார். அவர் மேலும் அதில் கூறியிருப்பதாவது,
சீனியர் ஒருவர் எனக்கு மெசேஜ் அனுப்பத் துவங்கி தனது காதலை தெரிவித்தார். இதனால் தான் கஷ்டப்பட்டேன். என்னுடன் படிக்கும் 2 பையன்கள் காதலை தெரிவித்தனர். இதை எல்லாம் யாரிடம் கூறுவது என்று தெரியவில்லை. நான் அனைத்து ஆண்களையும் வெறுக்கிறேன்.
ஏன் அனைத்து ஆண்களும் பெண்களையே பார்க்கிறார்கள். நான் அனைவரையும் வெறுக்கிறேன். ஆண், பெண் என்று ஏன் இந்த வித்தியாசம்? எனது வாழ்க்கை மற்றும் கல்லூரியை வெறுக்கிறேன். என் சாவுக்கு காரணமானவர்கள் தங்கள் தவறை உணர்ந்தால் போதும். அவர்கள் என்னைப் போன்று வேறு எநத் பெண்ணையும் தொல்லை செய்யாமல் இருந்தால் போதும் என்று அதில் தெரிவித்துள்ளார்.