பஞ்சாப்: அதிகரித்த கொரோனா- மார்ச் 1 முதல் கட்டுப்பாடுகள் அமல்- நெருக்கடியில் விவசாயிகள் போராட்டம்
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவதால் மார்ச் 1-ந் தேதி முதல் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,15,930. இவர்களில் 1,07,10,487 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டனர். கொரோனாவுக்கு மொத்தம் 1,56,498 பேர் இறந்துள்ளனர்.
தற்போதைய நிலையில் 1,44,395 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் திடீரென கொரோனா ஒருநாள் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனால் பல மாநிலங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தொடங்கியுள்ளது. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் முடிவில் மார்ச் 1-ந் தேதி முதல் பஞ்சாப்பில் மீண்டும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிவது ஆகியவை இம்மாநிலத்தில் கட்டாயமாக்கப்படுகின்றன.
தமிழகத்தில் மோசமாக பரவும் கொரோனா.. கவனமாக இல்லாவிட்டால் மகாராஷ்டிரா நிலைதான்.. ராதாகிருஷ்ணன்
நாள் ஒன்றுக்கு 30,000 கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மார்ச் 1 முதல் அரங்க கூட்டங்களில் 100 பேர் மட்டுமே கூடுவதற்கு அனுமதி வழங்கப்படும். அதேபோல் பொது இடங்களில் 200 பேர் மட்டுமே ஒன்று கூட வேண்டும் எனவும் முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனாவை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகளால் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர முடியாத நிலை உருவாகி உள்ளது.