'நாகா' நாய்கறி பிரியர்களிடம் சிக்கி படாதபாடு படும் அமைச்சர் மேனகா காந்தி
வடகிழக்கு மாநிலங்களில் விஸ்வரூபமெடுத்துள்ளது நாய் கடத்தல் தொழில். இதில் பிராணிகள் நலனுக்காக போராடும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி என்ன நடவடிக்கை எடுப்பார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் நாய்கறி விவகாரம் புதிய வகையில் 'கடத்தலாக' விஸ்வரூபமெடுத்து வருகிறது. ஏற்கனவே நாய்கறி சாப்பிட தடை விதிக்க கோரி தொடர்ந்து குரல் கொடுத்துவரும் பிராணிகள் நல ஆர்வலரான மத்திய அமைச்சர் மேனகா காந்தி இந்த நாய்கள் கடத்தல் விவகாரத்தை எப்படி கையாள்வார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகாலாந்து மக்கள் நாய்க்கறி பிரியர்கள்... நாய்க்கறிதான் அவர்களது உயர்வான அசைவ உணவு. நாகாலாந்து ஹோட்டல்களில் விதம் விதமான நாய்க்கறி டிஷ்களை பார்க்கவும் முடியும்.
அதேநேரத்தில் கறிக்காக நாய்களை அவர்கள் கொல்லும் விதம் படுகொடூரமானது. இதில் பெரிய விநோதமே நாகாலாந்தில் நாய்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. கண்ணில் நாய் சிக்கினாலே கறிதான் என்கிறபோது அம்மாநிலத்தில் தட்டுப்பாடு வரத்தானே செய்யும்.
நாய் கடத்தல் தொழில்
இதனால் வடகிழக்கு மாநிலங்களில் 'நாய் கடத்தல் தொழில்' களைகட்டத் தொடங்கியது. இது தற்போது விஸ்வரூமபெடுத்து உள்ளது. அஸ்ஸாமில் இருந்து நாகாலாந்துக்கு கடத்தி செல்லப்பட்ட 75 நாய்கள் ஒரு வேனில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
ஒரு நாய்க்கு ரூ300
இதில் 25 நாய்கள் மூச்சு திணறி இறந்துவிட்டன. ஒரு நாயை பிடித்து கொடுத்தால் ரூ300 முதல் ரூ500 வரை தருகிறார்கள். நாகாலாந்தில் ஒரு கிலோ நாய்க்கறி விலையே ரூ300 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாய்க்கறிக்கு நாகாலாந்தில் செம டிமாண்ட்.
மேனகா முயற்சி
ஏற்கனவே நாய்க்கறியை சாப்பிட தடை விதிக்க வேண்டும் என போராடிப் பார்த்தவர் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. ஆனால் நாகாலாந்து மக்களோ, நாய்க்கறியில் சத்து அதிகம் உள்ளது. எங்களது பண்பாட்டுடன் இணைந்தது. அதை கைவிட முடியாது என பதிலடி கொடுத்தனர்.
புதிய பிரச்சனை
இப்போது புதிய சமூக பிரச்சனையாக நாய் கடத்தல் தொழில் விஸ்வரூபமெடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை எப்படி மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் பீட்டாவும் தடுக்கப் போகிறது என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பு.