36 ஆண்டுக்குப் பின் ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி.. ஆனால் அதற்குக் காரணமான கேப்டன் டிஸ்மிஸ்!
டெல்லி: சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில், மோசமான செயல்பாடு மற்றும் அணுகுமுறை காரணமாக அந்த அணியின் கேப்டன் ரீது ராணி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள், பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனீரோ நகரில் அடுத்தமாதம் 5ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்தப் போட்டியில் சுமார் 36 ஆண்டுகளுக்குப் பின் இந்திய மகளிர் ஹாக்கி அணி பங்கேற்க தகுதி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனாக ரீது ராணி ஆகும்.
அதன் தொடர்ச்சியாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள உத்தேச மகளிர் அணிக்கான பயிற்சி முகாம் பெங்களூரில் நடைபெற்றது. அது சனிக்கிழமையோடு முடிந்தது. 16 பேர் கொண்ட இறுதி அணி வரும் 12-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், மோசமான செயல்பாடு மற்றும் அணுகுமுறை காரணமாக இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரீது ராணி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை அவர் பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இது குறித்து அணி நிர்வாகத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ரீது ராணி, ஒலிம்பிக் அணியில் இல்லை என்பது உண்மைதான். மோசமான செயல்பாடு மற்றும் அணுகுமுறை காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவரிடம் ஏற்கெனவே கூறினோம். ஆனால் அவர் தனது தவறை திருத்திக் கொள்ளவில்லை. இதையடுத்து அவரை பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றிவிட்டோம்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஹாக்கி இந்தியா தலைவர் நரீந்தர் பத்ரா கூறுகையில், "அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவிப்பது சரியாக இருக்காது. இது தொடர்பாக வரும் 12-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஆடவர், மகளிர் அணிகளுக்கான கேப்டன் மற்றும் துணை கேப்டன் தொடர்பான பரிந்துரைகளையும் அணி நிர்வாகம் அளித்துள்ளது. அது குறித்து வரும் 11-ஆம் தேதி முடிவெடுக்கப்படும்" என்றார்.
ஆனால், அணியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக ரீது ராணி இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரீது ராணியின் இந்த அதிரடி நீக்கத்தால் ஹாக்கி ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.