குடகு ...கொட்டி தீர்க்கும் ராட்சச மழை...இன்று மாலை பெரு வெள்ளம் ஏற்படும்...எச்சரிக்கை!!
குடகு: கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதுவரை பெய்தது கன மழை என்றால், இன்று மாலை அதி கன மழை பெய்து வெள்ளம் ஏற்பட இருப்பதாக மத்திய நீர் வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய நீர் வள ஆணையம் வெளியிட்டு இருக்கும் தகவலில், ''குடகு மாவட்டடத்தில் நபொக்லு என்ற இடத்தில் காவிரி ஆற்றில் தண்ணீர் மட்டத்தின் உயரம் அதிகரித்து வருகிறது. தற்போது 0.6 எம் என்ற உச்சபட்ச அளவில் இருக்கிறது. பாகமந்தலா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை அதிகமாக பெய்து வருகிறது. உடனடியாக வெள்ளம் குறைவதற்கான வாய்ப்பு இல்லை. இன்று மாலை மிக கன மழை பெய்து பெரிய அளவில் குடகுவில் வெள்ளம் ஏற்படும்'' என்று எச்சரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியில் இருந்து இன்று 7 ஆம் தேதி வரை குடகு பகுதியில் 105 செ. மீட்டர் மழை பெய்துள்ளது. தொடர்ந்து இப்படி மழை பெய்தால் நூறு ஆண்டுகள் சாதனையை இந்த மழை முறியடிக்கும் என்று தமிழ்நாடு வெதர் மேனும் பதிவிட்டுள்ளார். இந்தப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பீமா ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பெலகாவியில் விவசாய நிலங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.
2018.. 2019.. இப்போது 2020.. மூணார் நிலச்சரிவில் சிக்கிய தமிழ் தேயிலை ஊழியர்கள்.. மீண்டும் கொடூரம்!
இதேபோல் கேரளாவின் பல்வேறு இடங்களில் பயங்கர மழை கொட்டித் தீர்த்து வருகிறது. வயநாடு பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக 370 எம்எம் 530 எம்எம், 280 எம்எம் மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் இன்று பெய்த மழையில் மூணாறில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் 13 பேர் உயிரிழந்தனர்.
கேரளாவில் பெரியார் ஏரியில் இருக்கும் சிவன் கோயில் மூழ்கியுள்ளது. பல அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மீண்டும் கேரளா வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் பதனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
காவேரி ஆற்றில் இருந்து வினாடிக்கு 16000 திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டலு வந்தடைந்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் தமிழகத்துக்கு அதிகளவில் தண்ணீர் வரத்து இருக்கிறது. நீலகிரியில் இருக்கும் முக்குர்த்தி அணைக்கு கடந்த நான்கு நாட்களில் 326 எம்எம் தண்ணீர் வந்துள்ளது. இங்கு 1500 எம்எம் மழை பெய்துள்ளது. வால்பாறையில் இருக்கும் சோலையாறு அணை, காடம்பாறை அணை, அப்பர் ஆழியாறு, துண்ணக்கடவு அணை ஆகியவையும் நிறைந்துள்ளன. பவானி சாகர் அணையும் நிறைந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.