அனைத்து நதிநீர் பிரச்சினைக்கும் ஒரே தீர்ப்பாயம்! மத்திய அரசு முடிவால் காவிரி வாரியத்திற்கு சிக்கல்?
டெல்லி: மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனையை தீர்க்க ஒரே நதிநீர் தீர்ப்பாயம் அமைக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு மாநிலங்கள் நடுவே நதிநீர் பிரச்சனைகள் தொடருவதால், அவற்றுக்கு தீர்வு காண மத்திய நீர்வளத்துறை இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நதிநீர் தீர்ப்பாயத்தின் தலைவராக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நியமிக்கப்படுவார். தேவைப்பட்டால் முன்னாள் நீதிபதிகள் அடங்கிய பெஞ்சை அவர் உருவாக்கிக் கொள்ளலாம். எந்த ஒரு நதிநீர் சிக்கல் தொடர்பான வழக்குகளையும் விசாரித்து இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு தருவதாக இந்த தீர்ப்பாயம் அமையும்.
இதற்காக, மாநிலங்கள் நடுவேயான நதிநீர் தாவா சட்டம் 1956-ல் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு திட்டம் இருப்பதை மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் சசி சேகரும் உறுதி செய்துள்ளார்.
தீர்ப்பாயத்துடன் சேர்த்து, டி.ஆர்.சி என்ற கமிட்டி உருவாக்கப்படும். இதில் நீர்வள துறை நிபுணர்கள் இடம் பெற்றிருப்பார்கள். தீர்ப்பாயத்துக்கு வழக்கு வரும் முன்பாக இந்த கமிட்டி விசாரணையை நடத்துமாம்.
மத்திய அரசின் இந்த முடிவால் காவிரி மேலாண் வாரியம் அமைவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. காவிரி தொடர்பான வழக்கு ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் புது முடிவால், காவிரி மேலாண்மை வாரியம் தேவையில்லை என நீதிமன்றம் கருத வாய்ப்புள்ளது.
நாட்டில், நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க தீர்ப்பாயம் உதவும் என்றாலும், இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமையும் முயற்சியில் முக்கால் கிணறை தாண்டியுள்ள தமிழகத்திற்கு இது பின்னடைவாக அமையுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.