பீகார் வெற்றி... உ.பியில் பா.ஜ.கவுக்கு 'செக்' வைக்க சமாஜ்வாடியுடன் கை கோர்க்கும் லாலு!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திலும் பாரதிய ஜனதாவை தோற்கடிக்க சமாஜ்வாடி கட்சியுடன் கை கோர்க்கப் போவதாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் அறிவித்துள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் பரம வைரியாக இருந்த லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கை கோர்த்தது. இந்த அணியில் காங்கிரஸ் கட்சியும் இணைய தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இக்கூட்டணியில் தொடக்கத்தில் சமாஜ்வாடி கட்சியும் இடம்பெற்றிருந்தது. ஆனால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் எழவே அது தனி அணியாக களம் கண்டது. இந்த நிலையில் 2017 உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் இதே பார்முலாவுடன் களமிறங்க ராஷ்டிரிய ஜனதா தளம் தீர்மானித்துள்ளது.
இது குறித்து உத்தரப்பிரதேச ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் அசோக் சிங் கூறுகையில், பாரதிய ஜனதாவுக்கு எதிராக நாடு முழுவதும் நாங்கள் களமிறங்கி செயல்படுவோம். இதை உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் இருந்து தொடங்குவோம்.
உத்தரப்பிரதேசத்தில் 2017ஆம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியை மீண்டும் வெல்ல வைக்க ராஷ்டிரிய ஜனதா தளம் உறுதுணையாக இருக்கும். பாரதிய ஜனதாவின் அராஜகத்தை முடிவுக்கு கொண்டு எந்த ஒரு முடிவையும் மேற்கொள்வோம். பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் பார்த்துக் கொள்வோம்.
உத்தரப்பிரதேசத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் போட்டியிடுகிறதா என்பதைவிட எங்கள் நோக்கம் சமாஜ்வாடி கட்சியின் வாக்குகளை பலப்படுத்துவதுதான் என்றார்.