பாலியல் தொல்லை கொடுத்தவர்களை எதிர்த்த லாலு கட்சி எம்.எல்.ஏ.வின் சகோதரி அடித்துக் கொலை
போஜ்பூர்: பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி எம்.எல்.ஏ. சரோஜ் யாதவின் சகோதரி தனக்கு பாலியல் தாக்குதல் நடத்தியவர்களை எதிர்த்து போராடியபோது தாக்கப்பட்டதில் பலியானார்.
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கேஷோபூரை சேர்ந்தவர் ஷைலி(40). ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி எம்.எல்.ஏ. சரோஜ் யாதவின் சகோதரி. அவர் திங்கட்கிழமை இரவு உள்ளூர் மருத்துவரிடம் மருந்துகள் வாங்கிக் கொண்டு ஷேர் ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
வழியில் அந்த ஆட்டோவில் ஏறிய சில வாலிபர்கள் அவரிடம் தகாத முறையில் நடந்துள்ளனர். அதை அவர் எதிர்க்கவே ஒருவர் தான் வைத்திருந்த இரும்புக் கம்பியால் ஷைலியை தாக்கி ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.
தெருவில் கிடந்த ஷைலியை கிராமத்தினர் மீட்டு பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார்.
ஷைலி இறந்த பிறகு சரோஜ் யாதவின் ஆதரவாளர்கள் பாட்னா-ஆரா சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் இருவர் இன்று அரா நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.