பீகாரில் சட்டென மாறிய அரசியல் வானிலை.. நிதிஷ்குமாருடன் கை கோர்க்க லாலு கட்சி ரெடி!
பாட்னா: பாஜகவால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வரும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் மெகா கூட்டணியை மீண்டும் அமைக்க லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தள் விருப்பம் தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தள், காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது ராஷ்டிரிய ஜனதா தள்.
இன்னொருபுறம் பாஜக- ஐக்கிய ஜனதா தள் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால் மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தள் 2 இடங்களைக் கேட்டது. பாஜகவோ ஒரு இடம்தான் என திட்டவட்டமாக கூறியது.
இதனால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவுக்கு எதிராக திரும்பி வருகிறார். இதன் முதல் கட்டமாக பீகாரில் மட்டும்தான் பாஜகவுடன் கூட்டணி; மற்ற மாநிலங்களில் தனித்து போட்டி என அறிவித்திருக்கிறார். இந்நிலையில் பாஜக அல்லாத கட்சிகள் ஒருங்கிணைந்து மெகா கூட்டணி அமைக்க வேண்டும்; நிதிஷ்குமார் இதற்கு தலைமை ஏற்க வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தள் மூத்த தலைவர் ரகுவன்ஸ் பிரசாந்த் சிங் கூறியிருந்தார்.
என் வயசையும் சேர்த்து உங்களுக்கு தந்திடறேன்.. லாலுவுக்கு ரோஸ் கொடுத்த ராப்ரி!
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி, நிதிஷ்குமாருடன் கூட்டணி அமைப்பதில் ஆட்சேபனை இல்லை என க்ரீன் சிக்னல் கொடுத்திருந்தார். மேலும் அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் சிவானந்த் திவாரியும், பாஜகவால் நிதிஷ்குமார் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்கும் வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு நிதிஷ்குமாருக்கு கிடைத்திருக்கிறது என அழைப்பு விடுத்திருக்கிறார்.
இப்படி ராஷ்டிரிய ஜனதா தள் கட்சி தமது ஈகோவை விட்டு கொடுத்து இறங்கி வந்திருப்பது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஐக்கிய ஜனதா தள் துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்கத்தில் மமதாவின் தேர்தல் கள ஆலோசகராகி இருக்கிறார்.
தற்போது ராஷ்டிரிய ஜனதா தள் இருகரம் கூப்பி நிதிஷை அழைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் பீகாரில் பாஜக- ஐக்கிய ஜனதா தள் கூட்டணி நீடிக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.