பச்சோரி மீதான பாலியல் புகார் உண்மைதான்... டெல்லி போலீஸ் குற்றப்பத்திரிகை
டெல்லி: தேரி அமைப்பின் துணை தலைவர் ஆர்.கே. பச்சோரி மீதான பாலியல் வழக்கில் 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை டெல்லி போலீசார் தாக்கல் செய்ய உள்ளனர்.
ஐ.நா. பருவநிலை மாற்ற குழுவின்(ஐபிசிசி) தலைவராக இருந்தவர் ஆர்.கே. பச்சோரி(75). அவர் எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவன(டிஇஆர்ஐ) தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29 வயது பெண் ஒருவர் பச்சோரி மீது டெல்லி போலீசில் பாலியல் புகார் அளித்தார்.
தான் தேரி அமைப்பில் 2013ம் ஆண்டு சேர்ந்ததில் இருந்து பச்சோரி தனக்கு பாலியல் தொல்லை அளித்தார், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்ஆப் மூலம் ஆபாசமாக மெசேஜ் அனுப்பினார் என்று தனது புகாரில் அந்த பெண் தெரிவித்திருந்தார். இதையடுத்து போலீசார் பச்சோரி மீது பாலியல் தொல்லை அளித்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.
பதவி விலகல்
பாலியல் வழக்கில் முன்ஜாமீன் பெற்ற பச்சோரி ஐபிசிசி தலைவர் மற்றும் தேரி அமைப்பின் தலைவர் பதவிகளில் இருந்து விலகினார். இந்நிலையில் அண்மையில் தேரி அமைப்பில் துணை தலைவர் பதவி ஒன்றை உருவாக்கினர். அந்த பதவி பச்சோரிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிக்கை
பச்சோரி மீதான பாலியல் தொல்லை வழக்கில் 500 பக்க குற்றப்பத்திரிக்கையை டெல்லி போலீசார் தயார் செய்துள்ளனர். அவர் தேரி அமைப்பின் தலைவராக இருக்கையில் அந்த பதவியை தவறாக பயன்படுத்தியதற்கான போதிய ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
பச்சோரி
2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பச்சோரி அந்த பெண்ணை 34 முறை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். மேலும் அவர் 2013ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை அந்த பெண்ணுக்கு 6 ஆயிரம் எஸ்.எம்.எஸ்.கள் மற்றும் வாட்ஸ்ஆப் மெசேஜ்கள் அனுப்பி வைத்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்ட இடத்தில்
நான் தேரியில் பணியாற்றியபோது பச்சோரி என்னிடம் அசிங்கமாக பேசியதுடன், கண்ட இடத்தில் என்னை தொட்டார், கட்டுப்பிடித்து முத்தம் கொடுத்தார். எனக்கு நேர்ந்த கொடுமை போன்று உலகில் வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்று பச்சோரி மீது புகார் அளித்த பெண் தெரிவித்துள்ளார்.