ஐ லவ் யூ டா செல்லம்: கட்டுப்பாட்டு அறைக்கு போன் போட்டு ஆண் போலீசாரை கலாய்க்கும் பெண்கள்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ஆண் காவலர்களை பெண்கள் கலாய்க்கும் கொடுமை நடந்து வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரும் ஆண் காவலர்கள் ஒரு வகையான அச்சத்துடனேயே உள்ளனர். காரணம் பெண்கள். ஆம், பல பெண்கள் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து நான் உன்னை காதலிக்கிறேன், என்னுடன் தயவு செய்து பேசுங்கள் என்கிறார்கள். சிலர் காவலர்களிடம் அசிங்கமாக பேசுகிறார்கள்.
இந்த சேட்டை ராணிகளால் உதவி தேவைப்படுவோரால் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள முடியாமல் உள்ளது.
இது குறித்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் கான்ஸ்டபிள் சஞ்சீவ் மாலிக் கூறுகையில்,
தினமும் 100 போன் அழைப்புகள் வருகிறது. அதில் 90 போன் அழைப்புகள் சேட்டைக்காரர்கள் செய்வது. சில எண்கள் எங்களுக்கு மனப்பாடமாக தெரிந்திருப்பதால் அந்த அழைப்புகளை கண்டுகொள்வது இல்லை. பெண்கள் தினமும் போன் செய்து கலாய்க்கிறார்கள்.
சிலர் காதலை தெரிவிக்கிறார்கள், சிலர் அசிங்கமாக பேசுகிறார்கள். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பல முறை கூறியும் பலன் இல்லை என்றார்.
மற்றொரு கான்ஸ்டபிளான பிரதீப் குமார் கூறுகையில்,
பெண்கள் போன் செய்து தொல்லை கொடுக்கிறார்கள். சில நேரம் ஆண்களும் போன் செய்து அசிங்கமாக பேசுவார்கள். சில சமயம் பெற்றோர் போன் செய்து தங்களின் குழந்தைகளின் கையில் போனை கொடுத்துவிடுவார்கள் என்றார்.