போலீஸ் என ஏமாற்றி வீடு புகுந்து 3 பெண்கள் கூட்டு பலாத்காரம்! டெல்லி அருகே அதிர்ச்சி சம்பவம்
டெல்லி: போலீஸ்காரர்கள் என ஏமாற்றி வீடு புகுந்து 3 பேர்களை அடுத்தடுத்து பலாத்காரம் செய்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா மாவட்டத்தில் உள்ள கரோலி கிராமத்தில் செங்கல் சூலை தொழிலாளர்கள் வசித்து வந்த பகுதிக்குள் நேற்று நள்ளிரவுக்கு பிறகு ஒரு கொள்ளை கும்பல் புகுந்தது.
அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்த கும்பல் தூங்கிக்கொண்டிருந்த 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். பின்னர் கிடைத்த பொருட்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து கிரேட்டர் நொய்டா போலீஸ் எஸ்.பி. சுஜாதா சிங் கூறியதாவது: சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து உள்ளோம். பாதிக்கபட்ட பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கபட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. என்றார்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் கணவர் கூறுகையில், "நள்ளிரவு 12.30 மணியளவில் ஏழெட்டு ஆண்கள் வந்து வீட்டு கதவை தட்டினர். யார் என்று கேட்டபோது, போலீசார் என்று கூறினர். விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகவும் அவர்கள் கூறினர். இதை நம்பி கதவை திறந்தேன். அப்போது அந்த கும்பல் ஆயுதங்களை காட்டி மிரட்டி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது.
வீட்டுக்குள் நுழைந்த கும்பலை சேர்ந்தவர்கள், என்னை மிரட்டிவிட்டு, மனைவியை ஒருவர் பின் ஒருவராக பலாத்காரம் செய்தனர். பிறகு பக்கத்து வீடுகளில் 2 பெண்களையும் இதேபோல அடுத்தடுத்து பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடினர்" என்று கூறியுள்ளார்.