நொய்டாவில் நிலநடுக்கத்தின் போது வங்கிக் கொள்ளை: ரூ.20 லட்சத்தை சுருட்டிய கொள்ளையர்கள்
டெல்லி: டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அங்குள்ள சிண்டிகேட் வங்கியில் நுழைந்த 2 மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து துப்பாக்கியை காட்டி ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானின் இந்துகுஷ் மலைப் பகுதியை மையமாக கொண்டு நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இது 7.5 அலகுகள் பதிவானது. இந்நிலநடுக்கத்தால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீ நகரில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதைத்தைத் தொடர்ந்து மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் அங்கு துண்டிக்கப்பட்டன.
இந்த நிலநடுக்க அதிர்வுகள் டெல்லி, சண்டிகர், சிம்லா உள்ளிட்ட வட இந்திய நகரங்களிலும் உணரப்பட்டன. டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டதைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பின் இயக்கப்பட்டன.
டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அங்குள்ள சிண்டிகேட் வங்கியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேறினார்கள். இதையடுத்து, 2 மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து துப்பாக்கியை காட்டி ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். வங்கியில் கொள்ளை நடந்த தகவல் வெளியே இருந்த ஊழியர்களின் கவனத்துக்கு வருவதற்குள், கொள்ளையர்கள் இருவரும் தப்பி சென்று விட்டனர். கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.