சபரிமலை உண்டியல் பணத்தை எண்ணப் போகும் ரோபோக்கள்!!!
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் சீசன் காலத்தில் வரும் வருமானத்தை எண்ண ரோபோக்களை பயன்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பல கோடி பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக மகர விளக்கு, மண்டல சீசன் காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இவ்வாறு வரும் பக்தர்கள் சபரிமலை கோவிலில் பல்வேறு இடங்களில் வைத்திருக்கும் உண்டியல்களில் காணிக்கை செலுத்துகின்றனர்.
இந்த காணிக்கை அனைத்தும் கோவில் அருகே உள்ள ஒரு அரங்கத்தில் எண்ணப்படுகின்றது. இதற்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஏராளமான ஊழியர்களை நியமித்துள்ளது. மண்டல, மகர விளக்கு காலத்தில் 24 மணி நேரமும் சுமார் 300 ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். இவர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
காணிக்கை எண்ணுவோர் அதை எண்ண செல்லும் போதும், எண்ணி திரும்பும் போதும் பலத்த சோதனைக்கு ஆளாகி வருகின்றனர். ஆனாலும் உள்ளாடைக்குள் மறைத்து பணத்தை சிலர் திருடி செல்கினறனர். இதை தடுக்க உண்டியல் எண்ணும் இடத்தில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனாலும் நூதன முறையில் ஊழியர்கள் பணத்தை திருடி செல்கின்றனர். இதையடுத்து உண்டியல் பணத்தை எண்ண மனிதர்களை பயன்படுத்தாமல் தானியங்கி இயநதிரம் அல்லது ரோபோவை பயன்படுத்த தேவசம் போர்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இது குறித்து பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அந்த நிறுவனத்தினர் பணததை எண்ண ரோபோவை உருவாக்க தீர்மானித்தனர். இதற்கான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இவை உண்டியலில் வரும் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு கரன்சிகளை தரம் பிரித்து தனித்தனியாக எண்ணி கம்ப்யூட்டரில் பதிவு செய்யும. மனிதர்களை விட இது வேகமாகவும், துல்லியமாகவும் பணத்தை எண்ணும் திறன் உடையது என கூறப்படுகிறது.