திருமலை மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறை...அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் பக்தர்கள்!
திருமலை செல்லும் மலைப்பாதையில் பாறை உருண்டு விழுந்து விபத்து ஏற்பட்டதில் அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் உயிர்தப்பினர்.
திருப்பதி : திருப்பதியிலிருந்து திருமலை செல்லும் மலைப்பாதையில் திடீரென பாறை உருண்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதியில், கீழ்திருப்பதி எனப்படும் அலிபிரியில் இருந்து மேல்திருப்பதி எனப்படும் ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருமலைக்கு இடையே, 2 மலைப்பாதைகள் உள்ளன. கீழிருந்து மலைக்கு வாகனங்கள் செல்வதற்கு முதல் மலைப்பாதையும், மேலிருந்து கீழே இறங்கி வருவதற்கு 2-வது மலைப்பாதையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
திருப்பதி, திருமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மலைப்பாதையில் மண் சரிந்து விழும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இன்று கீழ்திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பாதையில் பாறை ஒன்று உருண்டு விழுந்தது. ஒரு பாறை இரண்டாக உடைந்து விழுந்த நிலையில் மற்றொரு பாறை தடுப்பு வேலி அருகே உருண்ட சென்று விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருமலை- திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் எதுவும் அந்தப் பாதையில் செல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டத.
கிரேன் மூலம் பாறைகள் அகற்றப்பட்டதால் சிறிது நேரத்தில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. எனினும் ஒரு பாறை பலமாக சாலையில் விழுந்தததில் பலத்த சேதமடைந்ததால் சாலையை செப்பனிடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.