ஆஸ்ட்ரோசாட் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ
ஸ்ரீஹரிகோட்டா : இஸ்ரோவின் ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் மூலம் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி, வானியல் ஆராய்ச்சிக்கான அஸ்ட்ரோசாட் செயற்கைகோளை முதன்முறையாக பி.எஸ்.எல்.வி -சி30 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது.
இந்த செயற்கைக்கோள் இன்று காலை 10 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள, முதலாவது ஏவுதளத்தில் இருந்து 'பி.எஸ்.எல்.வி., சி - 30' ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான, 50 மணி நேர கவுன்ட் டவுண் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு துவங்கியது.
ஆஸ்ட்ரோசாட்...
இந்த ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளுடன், அமெரிக்கா, இந்தோனேஷியா மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த ஆறு சிறிய செயற்கைக் கோள்களும் சேர்த்து பி.எஸ்.எல்.வி., சி - 30 ராக்கெட்டில் இணைக்கப்பட்டிருந்தது.
வெற்றி...
ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளானது தற்போது பூமியில் இருந்து, 650 கி.மீ., உயரத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பி.எஸ்.எல்.வி -சி-30 ராக்கெட்டிலிருந்து 6 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக பிரிந்து சென்றன. ஆஸ்ட்ரோசாட் 22.32 நிமிடத்தில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
5 ஆண்டுகள்...
இந்த செயற்கைகோளானது விண்ணில் உள்ள புற ஊதா கதிர்கள், குறைந்த, அதிக ஆற்றல் வாய்ந்த எக்ஸ்ரே கதிர்கள் உள்ளிட்டவற்றை பல்வேறு அலைவரிசைகளில் ஆய்வு செய்யும். அஸ்ட்ரோசாட் செயற்கைகோளின் மொத்த எடை 1513 கிலோ ஆகும். இதன் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள்.
சிறப்பம்சம்...
இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதுவரை மற்ற நாடுகள் அனுப்பியுள்ள வானியல் ஆய்வுக்கான செயற்கைகோள்கள் குறைந்த அலைவரிசைகளை மட்டுமே ஆய்வு செய்யும் திறன் கொண்டவை. ஆனால், இஸ்ரோ அனுப்பியுள்ள அஸ்ட்ரோசாட் செயற்கைகோள் குறைந்த, அதிக ஆற்றல் கொண்ட அலைவரிசைகளை ஆய்வு செய்யும் திறன் கொண்டது.
முக்கிய மைல்கல்...
இந்த நிகழ்வானது இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல் என இஸ்ரோ விஞ்ஞானி குன்ஹி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மகத்தான சாதனை...
இதுவரை இவ்வகை செயற்கைகோள்களை அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே விண்ணில் செலுத்தி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அஸ்ட்ரோசாட் செயற்கைகோளை அனுப்புவதன் மூலம் இந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்து மகத்தான சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.