தற்கொலை செய்து கொண்ட மாணவர் ரோஹித் தலித் இல்லை: சுஷ்மா ஸ்வராஜ்
டெல்லி: தற்கொலை செய்து கொண்ட ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த ரோஹித் வெமுலா உள்பட 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் ரோஹித் கடந்த 17ம் தேதி தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரோஹித் துணிச்சலானவர் என்றும், அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என்றும் கூறி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில்,
இந்த வழக்கு குறித்து கிடைத்துள்ள தகவல்களின்படி அந்த மாணவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரே கிடையாது. அவரை தலித் என்று கூறுவதால் இந்த வழக்கை குறிப்பிட்ட சமூக பிரச்சனையாக சிலர் கருதுகிறார்கள் என்றார்.
ரோஹித்தின் தந்தை மணி குமாரும், தாய் ராதிகாவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வத்தேரா இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவரின் பாட்டி ராகவம்மா வாக்குமூலம் அளித்துள்ளார்.