பீர் ஆரோக்கிய பானமா? ஆந்திர அமைச்சரின் பேச்சுக்கு ரோஜா கடும் கண்டனம்
ஹைதராபாத்: குறைந்த ஆல்கஹால் கொண்ட பீர் மற்ற மதுபானங்களை விட உடலுக்கு நல்லது என ஆந்திர மாநில அமைச்சர் கூறியதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் விற்கப்படும் மற்ற மதுபானங்களை விட குறைந்த ஆல்கஹால் கொண்ட பீர் உடலுக்கு நல்லது என அம்மாநில கலால்துறை அமைச்சர் கொத்தபலி சாமுவேல் ஜவஹர் தெரிவித்துள்ளார்.
மேலும், மதுகுடிக்கும் மக்களின் பழக்கத்தை மாற்ற முடியாது, குறைந்தபட்சம் ஆல்கஹால் கலக்கப்பட்ட மதுபானத்தை குடிக்க வைக்கவே இந்தக் கருத்தை தெரிவித்ததாக அமைச்சர் கூறினார். அமைச்சரின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அமைச்சருக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அமைச்சரின் பேச்சுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரோஜா கூறுகையில், பீர் ஆரோக்கிய பானம் என்றால் அதை மருந்து கடைகளில் விற்பார்களா? அரசு மது விற்பனையை ஊக்குவித்து வருகிறது. மக்கள் மீது அக்கறை இல்லை. மாநில வருவாயை பெருக்க மது விற்பனைதான் ஒரே வழி என்று முடிவு செய்துவிட்டனர்.
85 பார்களுக்கு அனுமதி கொடுத்துள்ளனர். மதுக் கடைகளை அகற்றாமல் இருக்க ஊருக்குள் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றி இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.