கர்நாடகாவில் ராகுல் பேரணிக்காக 4 ஏக்கர் பயிர்களை அழித்த காங்கிரஸார்
பெங்களூர்: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ள பேரணிக்காக கர்நாடகாவில் அக்கட்சியினர் 4 ஏக்கர் நிலத்தில் இருந்த பயிர்களை அழித்துள்ளனர்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி வரும் 10ம் தேதி கர்நாடகாவில் நடக்கும் பேரணியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார். மேலும் அவர் 9 கிலோமீட்டர் பாதயாத்திரை செல்கிறார். பயிர் விளைச்சல் இல்லாமல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
இந்நிலையில் ராகுலின் பேரணிக்காக குடகூர் கிராமத்தைச் சேர்ந்த நீலப்பா ஹையர்பிதாரி என்ற விவசாயிக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த மக்காளச்சோளத்தை காங்கிரஸ் கட்சியினர் அழித்துள்ளனர். அந்த மக்காச்சோளத்தை அவர் இன்னும் 15 நாட்களில் அறுவடை செய்யவிருந்தார். இந்நிலையில் காங்கிரஸார் பயிரை அழித்துள்ளனர்.
தற்போது ராணிபென்னூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் அதுவும் விவசாய நிலத்தில் ராகுலின் பேரணிக்காக மேடை அமைக்கப்பட்டு வருகிறது. நீலப்பா காங்கிரஸ் ஆதரவாளர் என்றும், விரும்பித் தான் பயிர்களை அழிக்கவிட்டார் என்றும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தி பேரணி நடக்கும் இடத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார். அதன் பிறகு அவர் பாதயாத்திரை செல்லும் வழியை கட்சியினர் சுத்தம் செய்து வைத்துள்ளனர்.
இது குறித்து கர்நாடக மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் எஸ். பிரகாஷ் கூறுகையில்,
4 ஏக்கரில் உள்ள பயிர்களை அழித்து அங்கு கூட்டம் நடத்துவது கொடூரமானது. அவர் என்ன தமாஷ் செய்கிறாரா? பாதயாத்திரை மற்றும் கூட்டம்...இது தேவையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.