மைசூரு மகாராஜா யதுவீர் கிருஷ்ணதத்த சாம்ராஜ உடையார் திருமணம்... அரண்மனையில் கோலாகாலம்
மைசூர்: மைசூரு மகாராஜா யதுவீர் கிருஷ்ணதத்த சாம்ராஜ உடையார்-த்ரிஷிகாகுமாரிசிங் திருமணம் இன்று காலை அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது.
மைசூரு, ராஜஸ்தான் மன்னர் குடும்பத்தினர் மட்டுமில்லாமல், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள் பலரும் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளதால் மைசூரு அரண்மனை உள்ள பகுதிகள் திருவிழா கோலம் பூண்டுள்ளது.
இன்று காலை 7 மணிக்கு திருமண மேடைக்கு மணமகன் அழைத்து வரப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 9.30 மணியளவில் யதுவீருக்கும், திரிஷிகா குமாரிக்கும் திருமணம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு மணமக்களின் ஊஞ்சல் நிகழ்ச்சியும், நாளை காலை 9 மணிக்கு ஆன்மீக நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
கர்நாடக மாநிலத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்கள், 1399ம் ஆண்டு முதல் 1950ம் ஆண்டுவரை மைசூரை ஆண்டு மறைந்த மன்னர்களை தங்களது குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.
மைசூரு மன்னர்கள் ஆண்டகாலத்தில் அவர்களின் அரண்மனையாக இருந்த பிரமாண்ட மாளிகை மைசூர் நகரில் அமைந்துள்ளது. தசரா திருவிழா மற்றும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளின் மாலை வேளைகளில் ஒருமணி நேரமும் இந்த மாளிகை மின்விளக்கின் அலங்காரத்தில் ஜொலிக்கும். இதை பார்வையிட நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அரண்மனைக்கு வருவதுண்டு.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மைசூர் மாகாணத்தின் மன்னராக இருந்தவர் ஸ்ரீஜெயசாமராஜேந்திர உடையார். இவர் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரை தனது மகனாகத் தத்தெடுத்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 1974ம் ஆண்டு நரசிம்மராஜ உடையார் மைசூர் மகாராஜாவாக முடிசூட்டப்பட்டார்.
மைசூரு மன்னர் குடும்பம்
மைசூரு மன்னர் ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா உடையார் கடந்த 2013ம் ஆண்டு காலமானார். அவருக்கு நேரடி ஆண் வாரிசு யாரும் இல்லாததால் பல மாத காலமாக மைசூர் அரண்மனையின் அடுத்த வாரிசு யார்? என்ற குழப்பம் ராஜ குடும்பத்தில் நிலவி வந்தது.
புதிய மன்னர் வாரிசு
இந்நிலையில், காலஞ்சென்ற மன்னர் ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா உடையாரின் மூத்த சகோதரியான காயத்ரி தேவியின் பேரனான யதுவீர கோபாலராஜே அர்ஸ் என்பவரை அடுத்த வாரிசாக நியமிப்பது என ராஜ குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
அரசராக அறிவிப்பு
23 வயது இளைஞரான இவர் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மாசாச்சூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்று வந்தார். இவரை மைசூரு சமஸ்தானத்தின் அடுத்த அரசராக அறிவிக்கும் தத்தெடுக்கும் சடங்கு நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு மைசூர் அரண்மனையில் நடைபெற்றது.
யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையார்
மறைந்த மன்னர் ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா உடையாரின் மனைவியான ராணி பிரமோதா தேவி அவரை சம்பிரதாயப்படி, தனது மடியில் அமர வைத்து, யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையார் என்னும் புதிய பெயரை சூட்டினார். பின்னர், வெள்ளி தேரில் ஏறி அரண்மனை வளாகத்தை புதிய மன்னர் சுற்றி வந்தார்.
முடிசூட்டு விழா
இந்த நிகழ்ச்சியில் புதிய மன்னரின் பெற்றோர், கர்நாடக மாநில அமைச்சர்கள் மற்றும் ராஜ குடும்பத்தை சேர்ந்த சுமார் 37 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். புதிய மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையாருக்கு கடந்த மே மாதம் முறைப்படி முடிசூட்டு விழாவும் நடைபெற்றது.
திருமணம்
மன்னர் குல வாரிசாக தத்தெடுத்த யதுவீராவுக்கு திருமணம் செய்துவைக்க மைசூரு இளவரசி பிரமோதாதேவி முடிவு செய்தார். யதுவீர மன்னராக பட்டம் சூட்டுவதற்கு முன் கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது ராஜஸ்தான் மாநிலத்தில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த த்ரிஷிகாகுமாரிசிங்கை காதலித்து வந்தார். அவரையே திருமணம் செய்து வைப்பது என பிரமோதாதேவி முடிவு செய்தார்.
ஜொலிக்கும் அரண்மனை
திருமணம் இன்று நடந்தாலும், மன்னர் குடும்ப பாரம்பரியம்படி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பே திருமண சடங்குகள் தொடங்கிவிட்டது. கடந்த ஒரு வார காலமாகவே அரண்மனை மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.திருமணத்திற்கான அரண்மனையில் அர்ச்சர்கள், புரோகிதர்கள், பல மடங்களை சேர்ந்த மடாதிபதிகள் தினமும் பல்வேறு யாக, ஹோமங்கள் நடத்தினர்.
பாரம்பரிய திருமணம்
நேற்று முன் தினம் மணமக்களுக்கு பாதபூஜை, சாமுண்டீஸ்வரிக்கு சிறப்பு பூஜை, 450 விநாயகர் சிலைகளுக்கு பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. இன்று காலை 6.30 மணியளவில் நெல், மொச்சைக்கொட்டை ஏற்றிச் செல்லும் ஊர்வலம் நடைபெற்றது.
அரண்மனையில் கோலாகலம்
இன்று காலை 7 மணிக்கு திருமண மேடைக்கு மணமகன் அழைத்து வரப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 9.30 மணியளவில் யதுவீருக்கும், திரிஷிகா குமாரிக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இரவு 7 மணிக்கு மணமக்களின் ஊஞ்சல் நிகழ்ச்சியும், நாளை காலை 9 மணிக்கு ஆன்மீக நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.