ரூ1,000 கோடி நில அபகரிப்பு வழக்கில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆளுநர் கமலா பெனிவால்!!
டெல்லி: ஆளுநர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட கமலா பெனிவால் மீதான ரூ1,000 கோடி நில அபகரிப்பு வழக்கு விஸ்வரூபமெடுக்கிறது.
மத்தியில் மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற நிலையில், குஜராத் ஆளுநராக இருந்த கமலா பேனிவால் மிசோரம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். மிசோரம் ஆளுநராக கடந்த மாதம் 6-ந்தேதி பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் அவர் கடந்த 6-ந்தேதி திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் முடிவடைய 2 மாதங்களே உள்ள நிலையில், அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது மத்திய அரசின் பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
ரூ1,000 கோடி நில அபகரிப்பு வழக்கு
இந் நிலையில் கமலா பேனிவால், ரூ.1,000 கோடி நில அபகரிப்பு வழக்கில் தொடர்புடையவர் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்தை கமலா பேனிவால் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் 16 பேர் இணைந்து அபகரித்ததாக, ஜெய்ப்பூர் பெருநகர மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் கடந்த 2012 ஆகஸ்டு மாதம் புகார் செய்யப்பட்டது.
சஞ்சய் அகர்வால் உள்ளிட்ட தன்னார்வலர்கள் இந்த வழக்கை தாக்கல் செய்தனர். ஆனால் கமலா பேனிவால் அப்போது ஆளுநராக இருந்ததால், அவர் மீதான விசாரணைக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. எனவே இந்த வழக்கில் அவரைத்தவிர மற்ற 16 பேருக்கும் பெருநகர நீதிபதி நோட்டீசு அனுப்பினார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் வைசாலி நகர் போலீசார், கமலா பேனிவால் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கடந்த மே மாதம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது கமலா பேனிவால் ஆளுநர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த வழக்கு விசாரணைக்கான விலக்கு நீக்கப்பட்டு உள்ளது.
எனவே 27-ந் தேதி நடைபெறும் விசாரணையின் போது, இந்த வழக்கில் கமலா பேனிவாலுக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்போவதாக சஞ்சய் அகர்வாலின் வழக்கறிஞர் அஜெய் ஜெயின் கூறியுள்ளார்.