திருவனந்தபுரம் நகைக்கடையில் ரூ.1.6 லட்சம் மதிப்பு அமெரிக்க டாலர்கள் பறிமுதல்: உரிமையாளர்கள் கைது
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ. 1 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் சாலை பகுதியில் இருக்கும் நகைக்கடை ஒன்றில் சட்டவிரோதமாக அமெரிக்க டாலர்கள் இந்திய ரூபாய்க்கு மாற்றிக் கொடுக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த நகைக்கடைக்கு திடீர் என்று சென்று சோதனை செய்தனர்.
சோதனையில் கடையில் ரூ. 1 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அமெரிக்க டாலர்களுக்கு கடைக்காரர்களால் உரிய ஆவணங்களை அளிக்க முடியாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் நகைக்கடை உரிமையாளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். முதல் கட்ட விசாரணையில் கைதான இருவரும் சட்டவிரோதமாக அமெரிக்க டாலர்களை இந்திய ரூபாய்க்கு மாற்றிக் கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.