இடியாப்ப சிக்கலில் கார்த்தி சிதம்பரம்: ரூ.1 கோடி பண பரிமாற்றம் பற்றி விசாரிக்கும் அமலாக்க துறை
மும்பை: கார்த்தி சிதம்பரம் அதிகாரம் படைத்த அரசியல்வாதி ஒருவருக்கு ரூ. 1 கோடி பண பரிமாற்றம் செய்தது குறித்து அமலாக்க இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.
ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அன்னிய முலீடுக்கான அனுமதி பெற்று தந்ததில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கடந்த 28ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கார்த்தி ராயல் ஸ்காட்லாந்து வங்கியின் சென்னை கிளையில் உள்ள தனது கணக்கில் இருந்து அதிகாரம் படைத்த அரசியல்வாதி ஒருவருக்கு ரூ. 1.8 கோடி பண பரிமாற்றம் செய்துள்ளது குறித்து அமலாக்க இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.
கார்த்தி ஏன் அவ்வளவு பெரிய தொகையை அந்த நபருக்கு அளித்தார் என்பது இன்னும் தெரியவில்லை. ஐ.என்.எக்ஸ். வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தியின் காவல் இன்றுடன் முடிகிறது.
இந்நிலையில் ரூ. 1.8 கோடி பண பரிமாற்றம் தொடர்பாக கார்த்தியை தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது அமலாக்கத் துறை. மேலும் அந்த அரசியல்வாதியிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
அன்னிய முதலீடு பெறுவது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தின் உதவியை நாடியதாகவும், அதற்காக அதற்கு ரூ. 10 லட்சம் கொடுத்ததாகவும் இந்திராணி வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.