உஷார் மக்களே.. பான் மசாலா வியாபாரி பேங்க் கணக்கில் திடீரென வந்து விழுந்த 10 கோடி
வங்கி கணக்கில் ரூ.10 கோடி அனாமத்தாக வரவு வைக்கப்பட்டிருந்ததை பார்த்ததால் ஜார்கண்ட்டில் பான் மசாலா வியாபாரி கடும் அதிர்ச்சியடைந்தார்.
ராஞ்சி: வங்கி கணக்கில் ரூ.10 கோடி அனாமத்தாக வரவு வைக்கப்பட்டிருந்ததை பார்த்ததால் ஜார்கண்ட் மாநில பான் மசாலா வியாபாரி கடும் அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து அம்மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜார்க்கணட் மாநிலம் கிரிடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பப்புகுமார் திவாரி. பான் மசாலா வியாபாரம் செய்து வரும் இவர் கிரிடியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில், தமது வங்கிக் கணக்கில் ரூ.4500 டெப்பாசிட் செய்து வைத்திருந்தார்.
அந்த பணத்தில் இருந்து செலவிற்காக ரூ. 1 ஆயிரம் எடுக்க அருகில் உள்ள ஏ.டி.எம்.-க்கு சென்றார். அப்போது, அந்த ஏடிஎம்.இல் ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. எனவே, அந்தப் பணத்தை எடுக்க வங்கிக்கு சென்றார். அங்கு பணம் எடுப்பதற்கான செல்லான் நிரப்பிக் கொடுத்து ரூ.1 ஆயிரம் தருமாறு வங்கி அலுவலரிடம் கோரினார். அவரது வங்கிக் கணக்கை ஆய்வு செய்த அலுவலர் அதில் ரூ.10 கோடி இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தார். மேலும், இவ்வளவு பணம் உங்களது வங்கிக் கணக்கில் எவ்வாறு வந்தது என்றும் அவரிடம் வங்கி அலுவலர்கள் கேட்டனர்.
பப்புகுமார் திவாரி மிகவும் சாதாரண ஒரு பான் மசாலா வியாபாரி என்பது வங்கி அலுவலர்களுக்கு நன்கு தெரியும். ஆகையால் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று அவர்கள் கேட்டதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தத் தகவலை அறிந்த பப்பு குமார் திவாரி கடும் அதிர்ச்சி அடைந்தார். ரூ.10 கோடி எப்படி வந்தது என்ற விபரம் தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக வங்கி அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பப்புகுமார் திவாரியிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும், பப்புகுமாரின் சேமிப்புக் கணக்கும் முடக்கப்பட்டது.
இதுகுறித்து பப்புகுமரார் கூறியதாவது:நாள்தோறும் பான் மசாலா விற்று வருகின்றேன். அதில் கிடைக்கும் வருமானத்தை வங்கியில் சேமித்து வருகிறேன். தற்போது, திடீரென எனது வங்கிக் கணக்கில் ரூ.10 கோடி வரவு வைக்கப்பட்டிருப்பது அறிந்தது மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன். இந்த தகவல் தெரிந்து இரவு முழுவதும் நானும் என் குடும்பத்தினரும் தூங்க முடியாமல் தவித்தோம். இந்த பணத்தை என் கணக்கில் போட்டது யார் என்று எங்களுக்கு தெரியாது.
மேலும், உழைக்காமல் வரும் ஒரு காசு கூட எனக்கு சொந்த மில்லை. எப்போதும், கஷ்டப்பட்டு உழைத்து சாப்பிடவே நான் விரும்புகிறேன் என்றார் பப்புகுமார். 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கருப்புப் பணத்தை பப்புகுமார் கணக்கில் யாரும் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், இவ்வளவு பெரிய தொகையை வங்கி அதிகாரிகள் வருமான வரித்துறை நிரந்தரக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் எப்படி வரவு வைத்திருக்க இயலும் என்ற கேள்வியும் எழுகிறது.