ரயில் பயணிகள் 92 பைசா செலுத்தி ரூ.10 லட்சம் காப்பீடு பெறும் திட்டம் அமல்!!
டெல்லி: ரயில் பயணிகள் 92 பைசா மட்டும் பிரிமியம் செலுத்தி ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறும் வசதி வியாழக்கிழமை முதல் இணையதள முன்பதிவில் அமலுக்கு வந்தது.
ரயில் பயணிகளுக்கு அவர்களது விருப்பத்தின்பேரில் காப்பீடு அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அந்த திட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
ரயிலில் பயணிப்பவர்களுக்கு மரணம் அல்லது முழுமையான உடல் செயல் இழப்பு ஏற்பட்டால் அவரது வாரிசுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கிடைக்கும். உடல் உறுப்புகளை இழந்தால் ரூ.7.5 லட்சம் கிடைக்கும். காயம் ஏற்பட்டவர்களுக்கு மருத்துவச் செலவாக ரூ.2 லட்சம் வரையிலும் வழங்கப்படும்.
இறந்தவரின் உடலை விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல ரூ.10 ஆயிரம் வரை இந்த காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பெற முடியும். இந்த காப்பீட்டுத் திட்டம் மூலம், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள், வெளிநாட்டவர் தவிர மற்ற அனைவரும் பயனடைய முடியும்.
புறநகர் ரயில்களுக்கு இந்தக் காப்பீட்டுத் திட்டம் பொருந்தாது. இணையதளம் மூலம் முன்பதிவு செய்பவர்கள் விருப்பப்பட்டால் கூடுதலாக 92 பைசா செலுத்தி இந்த காப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம். ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் காப்பீட்டுக்காகப் பெறப்பட்ட 92 பைசா திரும்பத் தரப்பட மாட்டாது.
ரயில்களில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள், கொள்ளை, வன்முறை, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்களில் பாதிக்கப்படுவோரும் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன் பெற முடியும். ஆர்சிடிசி-யுடன் இணைந்து ஐசிஐசிஐ லோம்பார்ட், ராயல் சுந்தரம், ஸ்ரீராம் ஆகிய காப்பீட்டு நிறுவனங்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தை அளிக்கின்றன.