ஊழல் பாவத்தை கங்கையில் கரைத்தனரா? நூற்றுக்கணக்கான 1000 ரூபாய் நோட்டுகள் மிதந்ததால் பரபரப்பு
லக்னோ: செல்லாமல் போன 1000 ரூபாய் நோட்டுகள் கிழிக்கப்பட்ட நிலையில் கங்கை நதியில் மிதந்தது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து மக்கள் பழைய நோட்டுகளை மாற்ற வங்கிகளில் வரிசையில் கால் வலிக்க காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று காலை உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் கோட்வாலி பகுதியில் உள்ள நார் காட்டில் கங்கை நதியில் கிழிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மிதந்தன. இதை பார்த்த மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து நோட்டுகளை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த உள்ளூர் மக்கள் கங்கை நதிக்கரையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை பரேலியில் ஒரு மூட்டை நிறைய எரிந்த நிலையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.