பகல் கொள்ளை தெரியும், இது பயங்கர கொள்ளையா இருக்கே.. 22 கி.மீ. பயணத்துக்கு ரூ.149 கோடி பில்!!
பிரபல கால் டாக்ஸி நிறுவனத்தில் 22 கி.மீ. தூரம் பயணம் செய்த மும்பை இளைஞருக்கு அந்நிறுவனம் ரூ.149 கோடியை கட்டணமாக தகவல் அனுப்பி அதிர வைத்தது.
மும்பை: பிரபல கால் டாக்ஸி நிறுவனம் 22 கி.மீ. தூரத்துக்கு ரூ.149 கோடி பில் தீட்டியதை கண்ட வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
மும்பையை சேர்ந்தவர் சுஷில் நார்ஷியான். இவர் கடந்த 1-ஆம் தேதி முலுந்த் மேற்கு பகுதியில் இருந்து வகோலா மார்க்கெட் பகுதிக்கு கால் டாக்ஸி ஒன்றில் சென்றார். இதற்கு கட்டணமாக ரூ.200-250 வரை வசூலிக்கப்படும் என்று எண்ணியிருந்தார்.
அவர் இறங்கும் இடம் வந்தடைந்ததும் அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதை படித்த உடனே ஹார்ட் அட்டாக் வராத குறையாக அதிர்ச்சி அடைந்தார். என்ன என்கிறீர்களா?
சுஷில் பயணம் செய்ததோ 22 கி.மீ தூரம்தான். இதற்கு விதிக்கப்பட்ட கட்டணமோ ரூ.149 கோடி. சுதாரித்து கொண்ட சுஷில் , இதுதொடர்பாக அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரது புக்கிங் எண்ணை வைத்து அவரது பயண கட்டணத்தை மதிப்பிட்டனர்.
பிறகு, தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ரூ.127 கட்டணத்துக்கு பதிலாக ரூ. 149 கோடி வந்துவிட்டதாக நிறுவனத்தினர் சுஷிலிடம் வருத்தம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ரூ.127-ஐ செலுத்தி விட்டு சென்றார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்திலும் போட்டுள்ளார் சுஷில்.
For a ride that didn't come to location specified, driver did not takeppen the door, I'm charged and how! Jai ho @Olacabs. Riding Uber now pic.twitter.com/SIOAFzs77g
— Sushil Narsian (@SushilNarsian) April 1, 2017
ஆனால் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்பதால் தங்களை ஏமாற்ற சுஷில் நினைப்பதாக நண்பர்கள் நம்ப மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து தனது செல்போன் எண்ணுக்கு வந்த எஸ்எம்எஸ்-ஐ படம்பிடித்து அனுப்பினார். பிறகுதான் அவரது நண்பர்கள் நம்பினர். ஒரு வேளை கால் டாக்ஸி ஏப்ரல் ஃபூல் செய்ய இதுபோல கலாய்த்திருக்குமோ!!