ராகு கேது பரிகார பூஜை : ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் கட்டணம் ரூ. 15000 ஆக உயர்வு
ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில், திருமணம், குழந்தைப் பேறு கிடைப்பதற்காக செய்யப்படும் ராகு கேது பரிகாரபூஜைக்கான கட்டணத்தை, ரூ.15,000 ஆக உயர்த்தி, கோவில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருமண தடை, குழந்தை பிறப்பதில் தடை ஏற்பட்டலோ ஜோதிடர்களை நாடுவது மனித இயல்பு. ஜாதகக் கட்டத்தை பார்த்து சில பரிகாரங்களை ஜோதிடர்கள் கூறுவது வாடிக்கை.
பெரும்பாலும் நாகதோஷம், ராகுகேது பரிகார பூஜைதான் கூறுவது வழக்கம். தமிழகத்தில் ராகு, கேது பரிகாரத்தலங்கள் பல உள்ளன. பெரும்பாலேனோர் ராகு கேது பரிகார பூஜைக்காக தேர்வு செய்வது ஸ்ரீகாளஹஸ்தியைத்தான்.
திருநாகேஸ்வரம்
தமிழகத்தில் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சிறந்த பரிகார தலமாக உள்ளது. அங்கு ரூ. 500, 200, 100 கட்டணத்தில் பாலபிஷேகம் செய்து ராகுவிற்கு பரிகாரம் செய்கின்றனர். ஞாயிறு கிழமை மாலை 4.30 மணிக்கு தொடங்கி 6 மணி வரை பரிகார பூஜைகள் செய்ய கூட்டம் கூடுகிறது.
வன்னி மரத்திற்கு தாலி
திருமணம் நடைபெற வேண்டி திருநாகேஸ்வரம் கோவிலில் உள்ள வன்னி மரத்தில் பலர் தாலி கட்டுகின்றனர். சிலர் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி தொட்டில் கட்டி வணங்குகின்றனர். இதற்கு நல்ல பலன் கிடைக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை
ஸ்ரீகாளஹஸ்தி
ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில், உடனடியாக திருமணம் ஆவதற்காகவும், குழந்தைப் பேறு கிடைப்பதற்காகவும் செய்யப்படும் ராகு கேது பூஜைக்கான கட்டணத்தை, ரூ.15,000 ஆக உயர்த்தி, கோவில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பரிகாரபூஜை
ஆந்திராவில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தி கோவில் திருப்பதியில் இருந்து, 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். இங்கு, ராகு, கேது தோஷம் காரணமாக, திருமணம் தடைபட்டவர்கள், குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினர் நாக பிரதிஷ்டை பூஜை என்பதை செய்வது வழக்கம். இதைச் செய்வதால், நீண்ட காலமாக தடைபட்டு வரும் திருமணம் உடனடியாக நடந்தேறும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாகும்.
கட்டண உயர்பு
கால சர்ப்ப தோஷம் உள்ள குழந்தையற்ற தம்பதிகளுக்காக, மற்றொரு பூஜை செய்யப்படுகிறது. இவ்விரு பூஜைகளை செய்வதற்காக, திருமணம் ஆகாத இளைஞர்கள் மற்றும் திருமணமான குழந்தையற்ற தம்பதிகள் ஸ்ரீ காளஹஸ்தி கோவிலுக்கு, நாள்தோறும் ஏராளமாக வந்துசெல்கின்றனர். இந்நிலையில், நாக பிரதிஷ்டை பூஜைகளுக்கான கட்டணத்தை ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை அதிகரித்து, கோவில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
லட்சக்கணக்கில் வசூல்
சுமார் 700 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த இக்கோவில், ஆண்டுக்கு சராசரியாக, ரூ.100 கோடி வருமானம் ஈட்டுகிறது. இந்நிலையில், பூஜை கட்டணத்தை இவ்வளவு அதிகம் உயர்த்துவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில பூசாரிகள், பரிகார பூஜை என்ற பெயரில் ரூ. 50000 ஆயிரம் கூட வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பக்தர்கள் அதிருப்தி
இந்திய அளவில், பூஜை கட்டணத்தை இவ்வளவு அதிகமாக உயர்த்திய கோவில் ஸ்ரீகாளஹஸ்தி மட்டுமே என பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். திருப்பதி திருமலையில்கூட இத்தகைய செலவு மிகுந்த பூஜைகள் செய்யப்படுவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.