ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்க பாஜக ரூ. 2000 கோடி பேரம்... முதல்வர் அதிரடி குற்றச்சாட்டு!!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக ரூ. 2000 கோடி அளவிற்கு பேரம் பேசி இருப்பதாக அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணைத்தலைவர் சச்சின் பைலட் இருவரும் போலீசில் புக்கார் அளித்துள்ளனர். இதையடுத்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக ரூ. 2000 கோடி பேரம் பேசி இருப்பதாக பதியப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜெய்ப்பூரில் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த அசோக் கெலாட், ''கொரோனா இருக்கும் இந்த நேரத்திலும். இந்த மாநில அரசின் எதிர்காலம் குறித்தும் உங்களிடம் பேச உள்ளேன். கொரோனாவக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். இதற்கிடையே கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் பாஜக எங்களது ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசி வருகிறது.
இதுமாதிரியான ஆட்கள் வெட்கம் கெட்டவர்கள். அவர்களது அசிங்கத்திற்கு ஒரு எல்லையே இல்லையே. எல்லை மீறி செல்கின்றனர். குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 7 பேரை இழுத்துக் கொண்டு இரண்டு எம்.பி. இடங்களை கைப்பற்றினார்கள். இதேபோன்று ராஜஸ்தானிலும் செய்ய வேண்டும் என்று முயற்சித்தனர். ஆனால், நாங்கள் அதற்கு அனுமதிக்கவில்லை'' என்றார்.
இவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு இரண்டு பாஜக தலைவர்களை சிறப்பு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அந்த இரண்டு பாஜக தலைவர்களும் அசோக் சிங் மேட்வாலா, பாரத் மலானி என்பது தெரிய வந்துள்ளது.