கிண்டல் வாசகங்களோடு, எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் வந்து விழுந்த 2000 ரூபாய் போலி நோட்டுக்கள்
டெல்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் ரூ.2000 போலி நோட்டுகள் வந்ததோடு அதில் ரிசர்வ் வங்கி என்பதற்கு பதிலாக குழந்தைகள் வங்கி என்று அச்சடிக்கப்பட்டிருந்ததை அடுத்த பரபரப்பு நிலவியது.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு திடீரென அறிவித்தது. இந்நிலையில் புதிய ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.
அந்த நோட்டுகள் பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டதால் போலி நோட்டுகளை எவராலும் அச்சடிக்க முடியாது என்று மத்திய அரசு பெருமிதம் கொண்டது.
இந்நிலையில் ரூ.2000 நோட்டு அறிமுகப்படுத்தத் தொடங்கிய காலத்தில் ஏடிஎம் மையங்களில் போலி ரூபாய நோட்டுகள் வந்தது, சின்னங்கள் இல்லாதிருப்பது, நோட்டின் ஒருபுறம் வெற்று காகிதமாக இருந்தது உள்ளிட்ட புகார்களுடன் நோட்டுகள் வந்தன.
போலி நோட்டுகள்
இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த ரோஹித் குமார் என்பவர் கடந்த 6-ஆம் தேதி டெல்லி சங்கம் விஹாரில உள்ள ஏடிஎம் மையத்தில் ரூ.8,000 எடுத்தார். அதில் வந்த 4 எணணிக்கையிலான ரூ.2,000 நோட்டுகள் அனைத்தும் போலியானவை என தெரியவந்தது.
போலீஸில் புகார்
இதுதொடர்பாக டெல்லி போலீஸாரிடம் ரோஹித் புகார் அளித்தார். அதன்பேரில் குறிப்பிட்ட ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்த போலீஸாருக்கும் அதுபோன்ற போலி நோட்டுகளே வந்தன. ஆனால் ஏடிஎம் மையத்தில் இருந்த நோட்டு கட்டுகளில் இருந்த அனைத்து ரூ.2000 நோட்டுகளும் நல்ல நோட்டுகளாக இருந்தன. இதனால் போலீஸார் விழிபிதுங்கி நின்றனர். உடனே சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
என்ன வித்தியாசம்?
பின்னர் இரு நோட்டுகளையும் ஒப்பிட்டு பார்த்தபோது போலீசாரும், வங்கி ஊழியர்களும் அதிர்ந்தனர். போலி நோட்டில் குழந்தைகள் வங்கி என்றும், ஆர்பிஐ முத்திரைக்கு பதில் பி.கே. என்ற முத்திரையும், அசோக சக்கரம் இருக்கும் இடத்தில் ஏதோ ஒரு வாசகமும், மத்திய அரசு உத்தரவாதம் என்ற இடத்தில் குழந்தைகள் அரசு உத்தரவாதம் என்று அச்சிடிப்பட்டு இருந்தது.
கரன்சி குறியீடு மிஸ்ஸிங்
மேலும் அந்த போலி நோட்டுகளில் இந்திய கரன்சி குறியீடுகள் காணப்படவில்லை. பாரதிய ரிசர்வ் வங்கி என்பதற்கு பதிலாக பாரதிய மனோரஞ்சன் வங்கி என்றும், ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்து இல்லாமலும் இருந்தது.
அலட்சியமான வங்கி அதிகாரிகள்
இந்த சம்பவத்துக்கு பின்னர் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி நோட்டுகள் அச்சு அசலாக ஆர்பிஐ நோட்டுகளைப் போல் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். ஒரு தேசியமயமாக்கப்பட்ட பிரபல வங்கியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருப்பது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியது.