கங்கையை சுத்தம் செய்ய எதுவும் செய்யப்படவில்லை.. 200 கோடி தூங்குகிறது.. சிஏஜி அதிர்ச்சி அறிக்கை
கங்கையை சுத்தம் செய்ய ஒன்றும் செய்யப்படவில்லை என்று சிஏஜி அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
டெல்லி: கங்கையை சுத்தம் செய்ய ஒன்றும் செய்யப்படவில்லை என்று சிஏஜி அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட பணமும் இன்னும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்று சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதுவரை இந்த திட்டத்திற்காக 200 கோடி பணம் வரை ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தில் நிறைய குளறுபடிகள் நடந்து இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.
மிக முக்கியமாக கங்கை நதி சுத்தப்படுத்தப்படாமல் இருப்பதால் முன்பு இருந்ததை விட தற்போது அதிக அசுத்தம் ஆகி இருக்க வாய்ப்பு உள்ளது. சென்ற பாராளுமன்ற தேர்தலில் கங்கையை தூய்மைபடுத்தும் வாக்குறுதி பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கனவு திட்டம்
பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம் பிடித்த வார்த்தை கங்கா. வட இந்தியாவில் எங்கு எல்லாம் கங்கா நதி ஓடுகிறதோ அந்த பகுதி சுத்தம் செய்யப்படும். நதி மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வரப்படும். நதியின் தூய்மை காக்கப்படும் என்று மோடி வாக்குறுதி அளித்து இருந்தார். இது தன்னுடைய கனவு திட்டம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
பணம் ஒதுக்கப்பட்டது
மோடி பிரதமராக பதவியேற்றபின் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியானது. முதல் கட்டமாக இதற்காக 200 கோடி பணம் ஒதுக்கப்பட்டது. மேலும் கங்கையை நதியை தூய்மை செய்யும் தேசிய இயக்கம் ஒன்று உருவாக்கபட்டது. இந்த இயக்கம் மத்திய சுகாதார அமைப்புடன் சேர்ந்து கங்கை நதியை சுத்தம் செய்யும். இதற்காக கங்கையில் தூய்மை செய்யும் எந்திரங்களையும், குழாய்களையும் பொருத்தும்.
ஒன்றும் நடக்கவில்லை
ஆனால் கடந்த 2014ல் இருந்து இதுவரை இந்த பணத்தில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. 14.77 கோடி மட்டும் தொடக்கத்தில் சில கூட்டங்களுக்காக செலவு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்பின் இந்த திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. எந்த பகுதியிலும் இதற்காக கட்டமைப்பு வசதியோ குறைந்தபட்ச தூய்மை செய்யும் வேலையோ கூட நடக்கவில்லை என்று சிஏஜி குறிப்பிட்டு உள்ளது.
காரணம் என்ன
உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களால் தான் கங்கா நதி அதிகம் மாசடைகிறது. அங்கு இன்னும் பல இடங்களில் அடிப்படை கழிப்பறை வசதி கூட செய்து தரப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததைவிட 334 புள்ளிகள் அதிகாக கங்கை நதி இதன் மூலம் மாசடைந்துள்ளது. மேலும் 2014ஐ விட இப்போதுதான் கங்கை நதி அதிகமாக அசுத்தம் அடைந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவித்துள்ளது.