பொது இடத்தில் புகைப் பிடித்தால் அபராதம் ரூ 200 ஆக உயர்வு... கேரளாவில் அமல்
திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப் படும் என புதிய உத்தரவு அமல் படுத்தப் பட்டுள்ளது.
ஏற்கனவே, பொது இடக்களில் புகை பிடிப்பவர்களுக்கு ரூ 100 அபராதமாக விதிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், சட்டத்தை மேலும் கடுமையாக்கும் வகையில் கேரள அரசு அபராதத் தொகையை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.
அந்தவகையில், இனி, பொது இடங்களில் புகைப் பிடிப்பவர்களிடம் ரூ 200 அபராதத் தொகையாக வசூலிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
விற்பனைத் தடை...
கேரளாவில், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பொது இடங்களில் புகைப்படிப்பது தண்டனைக்குரிய குற்றமாக சட்டமியற்றப் பட்டுள்ளது.
உத்தரவு...
விதியை மீறி பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது போலீசார் இதுவரை ரூ.100 அபராதமாக விதித்து வந்தனர். தற்போது, இந்தச் சட்டத்தை மேலும் கடுமையாக்கும் வகையில் கேரள மாநில அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
பொது இடங்களில்...
அதில், பொது இடங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக புகை பிடிப்பவர்களை எச்சரிக்கை செய்யவும், அவர்கள் மீது அபராதம் விதிக்கவும் சுகாதார துறை அதிகாரிகளுக்கும், மதுவிலக்கு, உணவுத்துறை, வனத்துறை அதிகாரிகளுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அபராதத் தொகை உயர்வு...
மேலும் இதுவரை பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது விதிக்கப் பட்டு வந்த அபராதத் தொகையான ரூ 100, அதிகரிக்கப்பட்டு இனி ரூ 200 அபராதத் தொகை வசூலிக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
2 வருட சிறைத் தண்டனை...
அதேபோல், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் அவர்களுக்கு 2 வருட சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.