பாகிஸ்தானால் புதிய 2000 ரூபாய் நோட்டு போன்று கள்ளநோட்டு அடிக்க முடியும்: ஏன்னா...
டெல்லி: புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளில் எந்த புதிய பாதுகாப்பு அம்சங்களும் இல்லாததால் அதே போன்று கள்ள நோட்டுகள் அச்சடிக்க முடியுமாம்.
புதிதாக அறமுகம் செய்யப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளில் பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அதனால் அதை வைத்து கள்ளநோட்டுகள் அச்சடிக்க முடியாது என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தான் உண்மை தெரிய வந்துள்ளது.
நானோ சிப்
2000 ரூபாய் நோட்டில் ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய நானோ சிப் உள்ளதால் அதை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் இது உண்மை இல்லை என நிதியமைச்சகமே தெரிவித்தது.
கள்ளநோட்டு
புதிய 2000 ரூபாய் நோட்டில் எந்தவித புதிய பாதுகாப்பு அம்சமும் சேர்க்கப்படவில்லையாம். அதனால் அதே போன்று கள்ளநோட்டுகள் அடிப்பதில் சிக்கல் இருக்காது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணத்திற்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அம்சங்களும் கள்ளநோட்டு கும்பலால் எளிதில் காப்பியடிக்க முடியுமாம்.
காங்கிரஸ் அரசு
முன்னதாக கடந்த 2005ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ரூபாய் நோட்டுகளில் சில பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டது. ஆனால் அந்த அம்சங்களுடனேயே கள்ளநோட்டுகள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான்
ஏற்கனவே புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களையே புதிய 2000 ரூபாய் நோட்டிலும் வைத்துள்ளதால் பாகிஸ்தானால் இது போன்று கள்ளநோட்டு அடிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
டிசைன்
நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களை மாற்ற 5 முதல் 6 ஆண்டுகள் ஆகும். புதிய நோட்டுகளை அறிமுகம் செய்யும் முடிவு 6 மாதங்களுக்கு முன்பு தான் எடுக்கப்பட்டதால் பாதுகாப்பு அம்சங்களை மாற்ற நேரம் இல்லை. டிசைனை மட்டும் மாற்றிவிட்டு பழைய பாதுகாப்பு அம்சங்களே வைக்கப்பட்டுள்ளன என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.