2000 ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்படுமா?: தீயாய் பரவும் தகவலுக்கு மத்திய அமைச்சர் பதில்
டெல்லி: 2000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட மாட்டாது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் காங்வார் தெரிவித்தார்.
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட உள்ளதாகவும், புதிய 200 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
நாடாளுமன்றத்தில் இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதிலளிக்க மழுப்பியது சந்தேகத்தை அதிகரித்தது
இந்நிலையில், டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இன்று அளித்த பேட்டியில் நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் காங்வார் கூறுகையில், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதன் அளவு குறைக்கப்பட்டிருப்பது உண்மைதான் என்றும், அது வேறு விவகாரம் என்றும், ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லை என்றும் தெளிவுப்படுத்தினார்.
மேலும் புதிய 200 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்தில் வர இருப்பதை அவர் உறுதி செய்தார்.