வாஸ்து சரியில்லை... அரசு வீடுகளுக்கு குடி போகாத எம்.பிக்களால் ரூ.24 கோடி தண்டம்
டெல்லி: அரசு வீடுகளை ஒதுக்கியும் அதிமுகவைச் சேர்ந்த 13 எம்.பி.க்கள் அரசு வீடுகளுக்கு குடிபோகவில்லை காரணம் வாஸ்து படுத்தும் பாடுதான். இவர்கள் மட்டுமல்ல அரசு ஒதுக்கிய வீடுகளுக்கு குடி போகாத 47 எம்.பிக்களினால் மத்திய அரசு கடந்த 5 மாதத்தில் ரூ. 21 கோடி வரை தண்டச்செலவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
டெல்லியில் லோக்சபா எம்.பி.க்களின் தற்காலிக தங்கும் வசதிக்காக செலவு செய்யப்பட்ட தொகை குறித்து சுபாஷ் அகர்வால் என்னும் சமூக ஆர்வலர், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வியெழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய அரசின் பொது தகவல் அதிகாரி ஜி.பி.சர்க்கார் அளித்த பதிலில் அதிர்ச்சிகரமான உண்மை வெளியாகியுள்ளது.
டெல்லியில் உள்ள மாநில அரசுகளின் இல்லங்களிலும், இந்தியச் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான விடுதிகளிலும் எம்.பி.க்கள் தங்கியதற்கு ஆன வாடகையை, விதிகளின்படி மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் அரசு மாளிகைகளின் இயக்குநரகம் செலுத்துகிறது.
லோக்சபா, ராஜ்யசபா செயலகங்கள் மூலமாக விடுதிகளில் எம்.பி.க்கள் தங்கிய காலம் குறித்த தகவல் பெறப்பட்டு, அதற்குண்டான தொகை செலுத்தப்படுகிறது.
நிரந்தர குடியிருப்பு
மத்திய பொதுப்பணித் துறையால் அவர்களுக்கு நிரந்தரக் குடியிருப்பு வழங்கப்பட்ட பிறகு, அந்தக் குடியிருப்புகளுக்கு மாறுவதற்காக அவர்களுக்கு 14 நாள்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட காலத்துக்கு மேல் தங்கிய எம்.பி.க்களுக்கு, அரசு எந்த செலவையும் செய்யவில்லை.
ரூ.24 கோடி செலவு
டெல்லியில், எம்.பி.களின் தங்கும் வசதிக்காக 2014ம் ஆண்டில் ரூ. 2.96 கோடி செலவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் மே மாதம் 22ம் தேதி வரை ரூ. 21.02 கோடி செலவு செய்யப்பட்டது என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கு கேட்ட சமூக சேவகர்
இது ஜனவரி முதல் மே 22ம் தேதி வரையிலான செலவுக் கணக்காகும். சுபாஷ் அகர்வால் என்ற சமூக சேவகர் ஆர்டிஐ மூலம் இந்தத் தகவலை மத்திய அரசிடமிருந்து பெற்று வெளியிட்டுள்ளார்.
47 எம்.பிக்கள்
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 47 லோக்சபா எம்.பிக்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், விடுதிகளில் தங்கியதற்காக அரசு செலவிட்ட தொகை மட்டும் ரூ. 21 கோடியே 2 லட்சத்து 18 ஆயிரத்து 717 ஆகும்.
அதிக செலவு ஏன்?
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகப் பெரிய செலவை மத்திய அரசு செய்துள்ளது. இதற்குக் காரணம் கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பல புதுமுகங்கள் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டதுதான் காரணமாம்.
குடியேறாத எம்.பிக்கள்
புதிய எம்.பிக்களுக்கு இன்னும் சரியான இருப்பிட வசதி கிடைக்கவில்லை என்று கூற்படுகிறது. அதேசமயம், பலர் கொடுக்கப்பட்ட இடத்தில் இன்னும் குடியேறவே இல்லை.
ஆந்திரா - கேரளா
ஆந்திராவைச் சேர்ந்த நான்கு எம்.பிக்கள் (3 பேர் தெலுங்குதேசம், ஒருவர் டிஆர்எஸ் கட்சி), கேரளாவைச் சேர்ந்த சிபிஎம் எம்.பி. இன்னொசன்ட், 13 தமிழக அதிமுக எம்.பிக்கள் இந்தப் பட்டியலில அடங்குவர்.
தம்பித்துரை எம்.பி
அதிமுக எம்.பிக்களில் லோக்சபா துணைத் தலைவர் தம்பித்துரையும் அடக்கம். 13 அதிமுக எம்.பிக்களில் 6 பேர் தங்களுக்கு வீடு கொடுக்கப்பட்டும் கூட போகாமல் உள்ளனராம். மக்கள் பணம் இப்படி தேவையில்லாத செலவுக்காக வீணடிக்கப்படுவதாக அகர்வால் குற்றம் சாட்டியுள்ளார்.
வாஸ்து சரியில்லையே
பல எம்.பிக்கள் வாஸ்து, பெங்ஷூயி ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதால் அதற்காகவும் குடியேறாமல் உள்ளனராம்.
வசதியாக இல்லையே
தங்களது விருப்பத்திற்கேற்ப வீடுகள் இல்லாத காரணத்தினால்தான் பலர் குடியேறாமல் உள்ளனராம். தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வீடுகள் போதிய வசதி கொண்டதாக இல்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிமுக எம்பி கூறியுள்ளார்
எம்.பிக்களிடம் வசூலிங்க பாஸ்
இப்படி மக்கள் பணம் வீணாகும் காரணத்தால் எம்.பிக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகர்வால் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இப்படி செலவிடப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட எம்.பிக்கள் அரசிடம் திருப்பித் தர வேண்டும் என்றும் அகர்வால் கூறியுள்ளார்.