மத்திய அரசின் மாதம் 3 ஆயிரம் ஓய்வூதிய திட்டம்.. 38 ஆயிரம் தமிழக விவசாயிகள் சேர்ப்பு
ராஞ்சி: மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் 38 ஆயிரம் தமிழக விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு மாதம் தோறும் 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் இத்திட்டத்தின் தொடக்க விழா ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது.
60 வயதை கடந்த சிறு குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டப்படி 18 வயது முதல் 40 வயது விவசாயிகள் மாதந்தோறும் ஒரு தொகை பங்களிப்பாக செலுத்த வேண்டும். உதாரணமாக 18 வயதை கடந்த விவசாயி ரூ.55ஐ செலுத்த வேண்டும். 40 வயது வரை பிரீமியம் தொகை உயரும். இதற்கு இணையான தொகையை மத்திய அரசு அளிக்கும். 40 வயது நிறைவு செய்யும் விவசாயி ரூ200 பங்களிப்பாக செலுத்துவார். அதற்கு பிறகு பங்களிப்பு செலுத்த தேவையில்லை.
இதன்படி பணம் செலுத்திய விவசாயிக்கு 60வயதை எட்டிய பிறகு மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியத்தை மத்திய அரசு அளிக்கும்.
இத்திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 37 ஆயிரத்து 904 விவசாயிகள் சேர்ந்துள்ளனர். அவர்களில் 18 வயது முதல் 25 வயது வரை 5 ஆயிரத்து 179 பேரும், 26 வயது முதல் 35 வயது வரை 11 ஆயிரத்து 777 பேரும், 36 முதல் 40 வயது வரையில் 7ஆயிரத்து 996 பேரும் இணைந்துள்ளனர்.
இவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4ஆயிரத்து 953 பேர் ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக விழுப்புரத்தில் ஆயிரத்து 952 பேர் சேர்ந்துள்ளனர். இந்த திட்டத்தின் தொடக்க விழா ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது. இந்த விழாவில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்கிறார்கள்.