பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த ரூ.4000 கோடி ஒதுக்குகிறது மத்திய அரசு
சென்னை: பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.4000 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு நகர திட்டம், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, அவசர உதவி எண், வடகிழக்கு மாநில பெண்களின் பாதுகாப்பு, உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு இந்த தொகையை ஒதுக்க ஒத்துக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்கள் பாதுகாப்புத் திட்டங்களுக்காக மத்திய அரசு உருவாக்கிய நிர்பயா நிதியில் இருந்து ரூ. 4, 000 கோடி பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் பல்வேறு திட்டங்களுக்கு செயல்படுத்த உள்ளது. பாதுகாப்பான நகரங்களை உருவாக்குவதற்காக பாதுகாப்பு நகர திட்டத்தினை செயல்படுத்த ரூ. 2,919 கோடிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி டெல்லி, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கொத்தா, அகமதாபாத், மற்றும் லக்னோ ஆகிய பெரிய நகரங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. பாதுகாப்பான நகர திட்டத்திற்குத்தான் அதிகப்படியாக ரூ.2,919 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை, அமிலவீச்சு, போன்ற கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இழப்பீடு வழங்கி உதவி செய்யும் வகையில் 200 கோடி
ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் தங்கள் அவசர உதவிகளுக்காக நாடு முழுவதும் 112 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த எண்ணை தொடர்பு கொண்டால் பெண்களுக்கான அவசர உதவி மையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.321 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தவிர சண்டிகரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் நவீன டி.என்.எ. பரிசோதனை வசதிகள் போன்ற நவீன வசதிகளை ஏற்படுத்த ரூ.99 கோடிகளும், வடகிழக்கு மாநில பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த ரூ.25 கோடிகளும், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆகியோருக்கான வசதிகளை மேம்படுத்த ரூ.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.