குட்கா விற்பனையில் ரூ. 40 கோடி லஞ்சம்.. விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு ஐ.டி. கடிதம்
தமிழகத்தில் குட்கா விற்பனைக்கு ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருமானவரித் துறை கடிதம் அனுப்பியுள்ளது.
டெல்லி: ரூ. 40 கோடி லஞ்சம் பரிமாற்றம் நடந்த குட்கா விற்பனை விவகாரத்தில் மத்திய அரசுக்கு, வருமான வரித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
குட்கா, பான்மசாலா போன்றவற்றை தமிழ்நாட்டில் விற்பனை செய்ய கடந்த 2013-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. என்றாலும் தடையை மீறி கடைகளில் குட்கா, பான் மசாலா தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தடையை மீறி குட்கா விற்கப்படுவது குறித்து அடுத்தடுத்து புகார்கள் எழுந்ததால், கடந்த ஆண்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது வடசென்னையில் உள்ள குட்கா உற்பத்தி பங்குதாரர் ஒருவரது வீட்டில் நடந்த சோதனையில் ரகசிய டைரி ஒன்று சிக்கியது.
அந்த டைரியில் குட்கா, பான்மசாலா விற்பனை செய்வதற்கு மாதந்தோறும் அமைச்சர், போலீஸ் கமிஷனர், துணை போலீஸ் கமிஷனர் உள்பட உயர் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டு இருப்பது அம்பலமானது. ஓராண்டில் மட்டும் ரூ.40 கோடி லஞ்சம் கொடுத்து இருப்பதை குட்கா உற்பத்தியாளரும் தனது வாக்குமூலத்தில் உறுதி படுத்தினார்.
விசாரணை நடத்தாத தமிழக போலீஸ்
இதையடுத்து, தமிழக அரசுக்கு இது தொடர்பாக வருமான வரித்துறை கடிதம் எழுதியது. அதன் பேரில் விசாரணை நடத்த போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் தமிழக போலீசார் இதுவரை யாரிடமும் உரிய விசாரணை நடத்தவில்லை. வருமான வரித்துறையிடம் இருந்து எல்லா ஆவணங்களையும் பெற்ற பிறகும் போலீசார் எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை.
அடுத்த நடவடிக்கையில் ஐ.டி.
இந்த நிலையில் குட்கா விற்பனை செய்வதற்கு அதிகாரிகள் லஞ்சம் பெற்ற விவகாரத்தில், வருமான வரித்துறை அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது. குட்கா விற்க அனுமதி கொடுப்பதற்காக லஞ்சம் வாங்கிய மத்திய சுங்கம் மற்றும் கலால் துறை உயர் அதிகாரிகள் பற்றிய தகவல்களை வருமானவரித் துறை திரட்டியது.
ஐ.டி. கடிதம்
அந்தப் பட்டியலை மத்திய நிதி அமைச்சகத்துக்கு வருமான வரித்துறை அனுப்பியுள்ளது. மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, சுங்கத் துறை ஆகியவற்றுக்கும் இது தொடர்பாக வருமான வரித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
சிக்கிய அதிகாரிகள்
அந்த கடிதத்தில் மத்திய சுங்கம் மற்றும் கலால் துறை அதிகாரிகளில் யார் யார் லஞ்சம் பெற்றனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அவர்கள் எவ்வளவு லஞ்சம் பெற்றனர் என்பதும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
அம்பலப்படுத்திய ஐ.டி.
குட்கா, பான்மசாலாவை சட்ட விரோதமாக தயாரித்து, விற்பனை செய்வதற்கு இந்த அதிகாரிகள் எப்படியெல்லாம் உதவியாக இருந்தனர் என்பதையும் வருமான வரித்துறை அம்பலப்படுத்தியுள்ளது. அந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகம்தான் பொறுப்பு
இதுகுறித்து வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாங்கள் குட்கா நிறுவனத்தில் நடத்திய சோதனையின் போது கைப்பற்றிய ஆவணங்களில் இருந்த தகவலை மத்திய அரசின் 3 துறைகளிடம் பகிர்ந்துள்ளோம். இனி இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய நிதி அமைச்சகத்திடம் தான் உள்ளது." என்று தெரிவித்துள்ளார்.