மது விலக்கினால் இப்படியெல்லாம் நன்மை கிடைக்குமா.. பீகார் சேமித்தது ரூ.5,280 கோடியாம்!
Recommended Video
பாட்னா: பீகாரில் மதுவிலக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் ஆண்டொன்றிற்கு சுமார் ரூ.5,280 கோடி சேமிக்கப்படுவதாக ஆசிய அபிவிருத்தி ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பீகார் மாநிலம் முழுவதும் மது விற்பனையை தடை செய்து மதுவிலக்கு அறிவித்தார். பீகாரில் மது விலக்கு அமல்படுத்தப்பட்டு இரண்டாண்டுகள் கடந்த நிலையில், மதுவிலக்கால் எந்தளவுக்கு பலன் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆராய்ச்சி முடிவு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
ஆசிய அபிவித்தி ஆராய்ச்சி நிறுவனம் பீகார் மாநிலத்தின் வர்த்தகம் குறித்து ஆய்வு செய்து ஆராய்ச்சி முடிவை நேற்று வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவில், பீகாரில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதன் விலைவாக, அம்மாநிலத்தில் தேன் விற்பனை 380 சதவிகிதமும், பாலாடைக்கட்டி 200 சதவிகிதமும், வெண்ணெய், பால் 40 சதவிகிதமும் விற்பனை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மதுவிலக்கு அறிவிக்கப்பட்டபின் பெண்கள் விலை உயர்ந்த சேலைகள் வாங்குவதில் கவனம் செலுத்தியதால், விலை உயர்ந்த சேலைகளின் விற்பனை 1,751 சதவிகிதம் உயர்ந்துள்ளது எனவும் உயர்தர ஆடைகளின் 910 சதவிகித அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு முடிவில் முக்கியமான தகவல் என்னவென்றால், பீகார் மாநிலத்தில் 19 சதவிகித குடும்பங்கள், இதற்கு முன்பு மதுவிற்கு செலவழித்த பணத்தை இப்போது புதிய சொத்துகளை வாங்க பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மது விலக்கால் பீகார் மாநிலத்தில், மாதந்தோறும் ரூ.440 கோடி சேமிக்கப்படுவதாகவு இதனால், ஆண்டுக்கு ரூ.5,280 கோடி சேமிக்கப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.
அதிமுக அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறியது. இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழக அரசு இன்னும் மது விலக்கை அமல்படுத்துவதைப் பற்றி மௌனம் காக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.