கர்நாடகாவில் ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்: கடத்தல்காரர் ஹுசைன் கைது
பெங்களூர்: கர்நாடகாவில் ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனபள்ளியைச் சேர்ந்தவர் முகமது அல்தாப் ஹுசைன் என்கிற இரானி அல்தாப்(36). பட்டதாரியான அவர் கடந்த 2010ம் ஆண்டு முதல் அவர் செம்மரக் கட்டைகளை கடத்தி வருகிறார். இந்நிலையில் ஹுசைன் ஆந்திர மாநிலக் காடுகளில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள 3 டன் செம்மரக் கட்டைகளை கர்நாடகாவுக்கு கடத்தி வந்துள்ளார்.
கடத்திய கட்டைகளை அவர் தொட்டபல்லபூரில் உள்ள காடனூர் கிராமத்தில் முன்னா என்பவரின் பண்ணை வீட்டில் மறைத்து வைத்திருந்தார். இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த சித்தூர் போலீசார் ஞாயிற்றுக்கிழமை இரவு காடனூர் வந்து செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்ததுடன் ஹுசைனை கைது செய்துள்ளனர்.
செம்மரக் கட்டைகள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் ஹுசைன். அவர் மூலம் சர்வதேச அளவில் செம்மரக் கட்டை கடத்தல் செய்யும் ஷரிப் பற்றி விபரம் தெரிய வரும் என்று போலீசார் நம்புகிறார்கள்.
இது தவிர சித்தூர் அருகே உள்ள பங்காருபாலத்தில் வைத்து செம்மரக் கடத்தல்காரர்களான அருள் மற்றும் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.