பிரபல கன்னட நடிகர் மருமகனின் வீட்டில் ரூ.6.6 கோடி பணம், 32 கிலோ தங்கம் பறிமுதல்
சித்ரதுர்கா: கன்னட நடிகர் தொட்டண்ணாவின் மருமகனும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான வீரேந்திராவின் வீட்டில் இருந்து ரூ.6.6 கோடி ரொக்கம், 28 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் 4 கிலோ தங்க நகைகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பிரபல கன்னட நடிகர் தொட்டண்ணாவின் மருமகன் கே.சி. வீரேந்திரா. மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதள கட்சி நிர்வாகி . கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரேவில் உள்ள அவரின் புதிய சொகுசு பங்களாவில் ஐடி அதிகாரிகள் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
வீட்டின் ஒரு பகுதி கூட விடாமல் சோதனை நடத்தினர்.
ரூ. 6.60 கோடி ரொக்கம்
வீரேந்திரா வீட்டு பாத்ரூமில் உள்ள ரகசிய இடத்தில் ரூ. 6.60 கோடி ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ரூ.5.7 கோடி ரொக்கம் புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக இருந்தது. ரூ. 90 லட்சம் அளவுக்கு 100 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளாக இருந்தது.
தங்கம்
சனிக்கிழமை நடத்திய சோதனையில் அதிகாரிகள் கிலோ கணக்கில் தங்கத்தை பறிமுதல் செய்தனர். வீரேந்திராவின் வீட்டில் இருந்து 28 கிலோ தங்கக் கட்டிகள், 4 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிரிக்கெட் பெட்டிங்
வீரேந்திரா கோவாவில் பல சூதாட்ட கிளப்புகளை நடத்தி வருகிறார். மேலும் கிரிக்கெட் பெட்டிங் வழக்கிலும் அவருக்கு தொடர்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெய்டு
வீரேந்திராவின் வீடு தவிர அவரது சகோதரர் கே.சி. நாகராஜ் மற்றும் திப்பேசாமி ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பணம் பதுக்கல் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.