நாட்டில் 70,000 கோடி அளவிற்கு பணத்தட்டுப்பாடு உள்ளது: எஸ்பிஐ வங்கி அறிக்கை
நாட்டில் 70,000 கோடி அளவிற்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை: நாட்டில் பல இடங்களிலும் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், நாடு முழுவதும் 70,000 கோடி ரூபாய் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் மிகுந்த சிரமத்திற்கு மக்கள் ஆளாகினர்.
ஆனால், ரிசர்வ் வங்கி இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், நாட்டில் போதிய அளவு பணப்புழக்கம் இருப்பதாகவும், குறுகிய காலகட்டத்திற்கான இந்த பணத்தட்டுப்பாட்டு நிலை விரைவில் சரியாகும் என்றும் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் 2017 -2018 நிதி ஆண்டில் 10.8% ஆக இருந்த நாட்டின் வளர்ச்சி விகிதம் நடப்பு நிதி ஆண்டில் 9.8% ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரூபாய் 19.4 லட்சம் கோடியாக உயர்ந்த பணப்புழக்கம் தற்போது ரூபாய் 17.5 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இந்த பற்றாக்குறையில் ரூ. 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அளவிற்கு மின்னணு பரிமாற்றம் மூலம் பண பரிமாற்றம் நடப்பதாக கூறப்பட்டுள்ளது.
நாட்டில் ரூபாய் 70000 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தட்டுப்பாடு நிலவி வருவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. ஆனால், ஏடிஎம் பரிவர்த்தனைகள் முதலாம் காலாண்டோடு ஒப்பிடுகையில் இரண்டாம் காலாண்டில் அதிகரித்து உள்ளது.