உஷார் மக்களே.. டெபிட் கார்டு ஒன்டைம் பாஸ்வேர்ட்டை போனில் ஷேர் செய்த சென்னை பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
Recommended Video
சென்னை: வங்கி அதிகாரிகள் போல் பேசி பெண்ணின் வங்கி கணக்கிலிருந்து ரூ.90 ஆயிரத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்ததால், அந்த பெண் மாரடைப்பால் மரணமடைந்த பரிதாப சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
தாசில்தாராக பணியாற்றுபவர் சேகர். இவரது தந்தை ராஜேந்திரன் ஓய்வுப்பெற்ற கருவூல அதிகாரியாகும். ராஜேந்திரன் தனது மனைவி ஜெயலட்சுமி (70)யுடன் சென்னை அண்ணா நகர் 4வது தெருவில் வசித்து வந்தார்.
ஜெயலட்சுமிக்கு இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு உண்டு. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜெயலட்சுமிக்கு ஏதோ ஒரு செல்போன் நம்பரிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
வங்கி அதிகாரி மாதிரியே பேசினர்
வங்கியிருந்து பேசுவதாக தன்னை அறிமுகம் செய்து கொண்டு நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஒருவர் ஜெயலட்சுமியிடம் பேசியுள்ளார். ஜெயலட்சுமியின் ஏடிஎம் கார்டு காலாவதியாகி விட்டதாக கூறிய அந்த நபர், புதிய ஏடிஎம் கார்டை வங்கியிருந்து தர உள்ளதாகவும் ஏடிஎம் கார்டின் மீது உள்ள 16 இலக்க எண்களை கூறும்படியும் சொல்லியுள்ளார்.
தகவல்களை கூறிய பெண்
வங்கி அதிகாரிதான் பேசுகிறார் என்று நினைத்து 16 இலக்க எண்ணை ஜெயலட்சுமி கூறியுள்ளார். இதன் பிறகு, உங்கள் செல்போனுக்கு ஒன் டைம் பாஸ்வர்டு வரும், அந்த எண்ணை சொல்லுங்கள் என்று அந்த நபர் போனில் கூறியுள்ளார். இதையடுத்து ஜெயலட்சுமியின் செல்போன் எண்ணுக்கு வந்த ஓடிபி எண்ணை அவரும் திரும்ப சொல்லியுள்ளார். அவ்வளவுதான், போன் துண்டிக்கப்பட்டது.
ரூ.90,000 அபேஸ்
சிறிது நேரத்தில் ஜெயலட்சுமியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.90 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது. ஆனால் இதை அறியாத ஜெயலட்சுமி போனில் பேசிய நபர்கள் கூறியபடி மறுநாள் வங்கிக்கு புது கார்டு வாங்க சென்றுள்ளார். ஆனால், அப்படி எதுவும் போன் வந்திருக்காதே என சந்தேகித்த வங்கி அதிகாரிகள், ஜெயலட்சுமி வங்கி கணக்கை சோதித்து பார்த்தபோது, ஜெயலட்சுமியின் பணம் 90 ஆயிரம் அபேஸ் ஆன விவரம் தெரியவந்துள்ளது.
பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
இதையறிந்ததும், அதிர்ச்சியில் ஜெயலட்சுமி அங்கேயே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துள்ளார். மாரடைப்பு அறிகுறி தென்படவே அவரை உடனடியாக வங்கி அலுவலர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், ஒரு நாள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற பிறகும், ஜெயலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வட மாநில கொள்ளையர்கள்
இது குறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட
விசாரணையில் அந்த திருட்டு நபர்கள் உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து போன் செய்துள்ளது தெரியவந்துள்ளது.