ஜனார்த்தன ரெட்டி வீட்டு திருமணம்... வைரத்தில் ஜொலித்த மணமகள்... விலை 90 கோடி ரூபாயாம்!
சுரங்க தொழில் அதிபர் ஜனார்த்தன ரெட்டி தனது மகள் திருமணத்திற்காக 90 கோடி ரூபாய்க்கு தங்க, வைர நகைகளை பரிசளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு: ஜனார்த்தன ரெட்டி தனது மகளுக்கு ரூ500 கோடியில் மிகவும் பிரம்மாண்டமாக நேற்று திருமணம் நடத்தி வைத்தார். இந்த திருமணத்தில் மணமகள் அணிந்திருந்த முகூர்த்த புடவை 19 கோடியாம். அவர் அணிந்திருந்த நகைகள் 90 கோடியாம்.. இதுதான் இப்போது பேச்சாக உள்ளது.
இந்த திருமணத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் பங்கேற்றனர். பிரபல திரை நட்சத்திரங்களும் பங்கேற்றதோடு பலகோடி ரூபாய் சம்பளம் பெற்று நடனமாடினர்
சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலை நடத்தி நாட்டுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்திய குற்றத்திற்காக ஜனார்த்தன ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டு அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. தற்போது ஜாமீனில் இருக்கிறார் ஜனார்த்தன ரெட்டி.
ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணிக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த சுரங்க அதிபர் ராஜீவ் ரெட்டிக்கும் நேற்று பெங்களூரில் ஆடம்பரமாக திருமணம் நடந்தது.திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு ஆந்திரா, உடுப்பி, சீனா, இத்தாலி ஸ்டைலில் 152 வகையான உணவு பரிமாறப்பட்டன.
இதற்காக பெங்களூரில் விஜயநகர பேரரசு அரண்மனை போல பிரமாண்ட செட்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பிரம்மாண்ட திருமணம்
பெங்களூரில் அரண்மனை போல பிரமாண்ட செட்கள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை ஜனார்த்தன ரெட்டி தனது மகளை சாரட் வண்டியில் அமரவைத்து திருப்பதி வெங்கடேஸ்வரா கோவில் போல அமைக்கப்பட்டுள்ள செட்டுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தார். திருமண மண்டபத்தில் இருந்த பொருட்கள் அனைத்துமே வெள்ளியில் ஜொலித்தது. திருப்பதியில் இருந்து அழைத்து வரப்பட்ட 8 வேத விற்பன்னர்கள் மந்திரங்களை ஓத மணமகள் பிராமணி கழுத்தில் ராஜீவ் ரெட்டி தாலி கட்டினார்.
வைர நகைகள்
இந்த ஆடம்பர திருமணத்தில் ரெட்டி சகோதரர்களின் குடும்பத்தினர் வைரத்துடன் ஜொலித்தனர். பெண்கள் அனைவரும் ஒட்டியானம், காப்பு உள்பட வகை வகையான வைர நகைகளை அணிந்திருந்தனர்.
தங்க ஜரிகையில் நெய்த புடவை
மணமகள் பிராமணி அணிந்த முகூர்த்த புடவையின் விலை ரூ.17 கோடி ஆகும். தங்க ஜரிகையால் நெய்யப்பட்டிருந்த புடவையில் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற வைர கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.
ரூ.90 கோடி வைர நகைகள்
மணமகள் பிராமணி நெற்றிச்சுட்டி, தலை அலங்காரம், வைர நெக்லெஸ், காது தொங்கட்டான் எல்லாமே வைரத்தில் ஜொலித்தது. 2 டஜன் வைர வளையல்கள் அணிந்திருந்தார். எல்லா வைர நகைகளும் சேர்ந்து மொத்தம் 90 கோடி ரூபாய் என்கின்றனர்.
கண்ணை கவர்ந்த நகைகள்
இதுபோன்ற வைர நகைகளை இதுவரை எந்த மணமகளும் அணிந்ததில்லை. இனியும் அணியப்போவதும் இல்லை என்று திருமணத்திற்கு வந்தவர்கள் பேசிக்கொண்டனர்.
பூக்கள் தூவிய மாடல்கள்
விருந்தினர்களை வரவேற்கவும், சிவப்பு கம்பளத்தின் மீது நடந்து வந்த மணமக்களின் மீது காஷ்மீர் ரோஜா மற்றும் ஆம்பூர் மல்லி மலர்களை தூவுவதற்கும் மும்பை, சென்னை, பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து 500 மாடல் அழகிகளும், 500 ஆண் மாடல்களும் வந்திருந்தனர். இவர்கள் வெள்ளை நிற பட்டுவேட்டி- சட்டை, வெள்ளை நிற பட்டுப்புடவை அணிந்திருந்தனர்.
தாம்பூல செலவு ரூ. 50 கோடியாம்
திருமண விழாவில் வெற்றிலை பாக்கு மடித்து தருவதற்காக 500 இளம்பெண்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். 5 நாட்கள் இரவில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிகளில் வெற்றிலை பாக்கு தாம்பூல செலவு மட்டும் ரூ.50 லட்சமாம்.
கவனம் ஈர்த்த திருமணம்
இங்கே 2000 ரூபாயை வங்கியில் இருந்து எடுக்க மக்கள் அலைந்து கொண்டிருக்க 500 கோடியில் அசால்டாக திருமணம் நடத்தி இந்தியாவின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஜனார்த்தன ரெட்டி. இந்த ஆடம்பரம்தான் வருமானவரித்துறையினரின் கவனத்தையும் ரெட்டியின் பக்கம் திரும்பியுள்ளது.