கூவத்தூர் பார்முலா செம ஒர்க் அவுட்.. அப்படியே "கை"யில் குத்திய 44 எம்.எல்.ஏக்கள்!
குஜராத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் கூவத்தூர் பாணியை கையாண்டு எம்எல்ஏக்களின் ஓட்டுக்களை கொத்தாக அள்ளியுள்ளது காங்கிரஸ் கட்சி.
அகமதாபாத்: கூவத்தூரில் தமிழக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டதை யாராலும் மறக்க முடியாது. அதே பாணியை கையாண்டு எம்எல்ஏக்களை அடைகாத்து கொண்டு போய் அகமது படேலை ஜெயிக்க வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நிலை வேறு எந்த கட்சிக்கும் ஏற்பட்டிருக்காது. கடந்த 15 தினங்களுக்கும் மேலாக திக் திக் மனநிலையில் இருந்த அகமது படேல் நேற்றிரவுதான் நிம்மதியாக உறங்கியிருப்பார்.
ராஜ்யசபா தேர்தலில் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் வெற்றி பெறுவதைத் தடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
தப்பி ஓடிய எம்எல்ஏக்கள்
இதனை தடுக்க பல எம்எல்ஏக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். ராஜ்க்கோட் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இந்திரானி ராஜ்யாகுரு தமது வீட்டிலும் கிளப்பிலும் 8 எம்.எல்.ஏக்களை தங்க வைத்துள்ளார். இவர்களில் ஒரு எம்.எல்.ஏ. திடீரென தப்பி ஓடிவிட்டார். வதோதராவில் 20 எம்.எல்.ஏக்கள் ஒரு பண்ணை வீட்டில் அடைத்து வைக்கப்பட்டனர். ஆனாலும் அவர்களை கட்டிக்காப்பது கடும் பிரயத்தனமாக இருந்தது.
அடைகாத்த காங்கிரஸ்
மேலும் பல எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு தாவுவதை தடுக்க, 'கூவத்தூர்' பாணியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேரை பெங்களூருவின் பிடதி ஈகிள்டன் ரிசார்ட்டில் வைத்து அடைகாத்தது கட்சித்தலைமை. இதற்காக ஐடி ரெய்டு வரை சந்தித்தார் கர்நாடக அமைச்சர் சிவகுமார்.
அப்படியே விழுந்த ஓட்டுக்கள்
ராஜ்யசபா தேர்தல் நேற்று நடைபெற்றது. இதற்காக பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்கள் அனைவரும் அகமதாபாத்திற்கு திரும்பினர். 44 எம்எல்ஏக்கள் ஓட்டு போட்டால் வெற்றி நிச்சயம் என்பது தெரிந்தே தங்களுக்கு விசுவாசமான எம்எல்ஏக்களை அடைகாத்தது காங்கிரஸ். அதற்கான பலன் கிடைத்தது. எம்எல்ஏக்கள் அப்படியோ தங்களின் வாக்குகளை அகமது படேலுக்கு போட்டு வெற்றி பெற வைத்தனர்.
கூவத்தூர் கூத்து
ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக 2ஆக பிளவுபட்டது. இதனால் எம்எல்ஏக்கள் வேறு அணிக்கோ, வேறு கட்சிக்கோ தாவிடுவர் என்ற அச்சத்தின் காரணமாக 122 எம்எல்ஏக்களை சசிகலா கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்டில் தங்க வைத்திருந்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அனைத்து எம்எல்ஏக்களும் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். அனைத்து எம்எல்ஏக்களும் ஒற்றுமையாக ஒட்டு போட்டு ஈபிஎஸ் அரசை காப்பாற்றினர். அதே பாணியை கையாண்டு அகமது படேலை வெற்றி பெற வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
5வதுமுறையாக எம்பி
சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரான அகமது படேலின் வெற்றி காங்கிரஸ் கட்சியின் கவுரவப் பிரச்சினையாக இருந்தது. எனவேதான் பாஜகவின் ராஜதந்திரங்களையும், தகிடுதத்தங்களையும் முறியடித்து எப்படியோ வெற்றி பெற்றுவிட்டது.