கன்னையா குமார் நாக்கை வெட்டினால் ரூ.5 லட்சம்... சுட்டுக் கொன்றால் ரூ11 லட்சம்....தொடரும் வெறித்தனம்
லக்னோ: டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமாரின் நாக்கை வெட்டினால் ரூ5 லட்சம்; அவரை சுட்டுக் கொன்றால் ரூ11 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று இந்துத்துவாவாதிகளின் வெறித்தனமான அறிவிப்புகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) கடந்த மாதம் 9-ந்தேதி இந்தியாவுக்கு எதிராக மாணவர்கள் சிலர் கோஷம் எழுப்பியதாகவும், இதுதொடர்பாக பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் 12-ந்தேதி தேசவிரோத வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் கன்னையாகுமார் அப்படி தேசவிரோத முழக்கங்கள் எழுப்பவில்லை; சில ஊடகங்கள்தான் போலி வீடியோக்கள் மூலம் இந்த வேலையை செய்ததும் அம்பலமானது. இதனைத் தொடர்ந்து கன்னையாகுமாரை டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது.
ஜாமீனில் விடுதலையான பின்னர் ஜே.என்.யூ.வில் மாணவர்களிடையே கன்னையாகுமார் ஆற்றிய உரை அனைவரையும் பிரமிக்க வைத்திருக்கிறது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம், படாவன் மாவட்டத்தின் பாஜக யுவ மோர்ச்சா தலைவரான குல்தீப் வார்ஷினி, அப்சல் குரு போன்ற தீவிரவாதிகளுக்கு ஆதரவாக தேச விரோத கோஷங்களை கன்னையாகுமார் எழுப்புகிறார். கன்னையா குமார் நாக்கை வெட்டுபவர்களுக்கு நான் 5 லட்ச ரூபாய் தருகிறேன் எனக் கூறியுள்ளார். பாஜக பிரமுகரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டிஸ்மிஸ்
இந்நிலையில் சர்ச்சைக்குரிய இந்த பேச்சுக்காக குல்தீப் வார்ஷினியை பாஜக 6 ஆண்டுகாலம் கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லியில் போஸ்டர்
இதனிடையே கன்னையாகுமாரை சுட்டுக் கொலை செய்பவர்களுக்கு ரூ11 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பூர்வாஞ்சல் சேனா என்ற அமைப்பின் சார்பில் டெல்லியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் ஆதார்ஷ் சர்மா கூறுகையில், கன்னையா குமார் ஒரு தேசதுரோகி; அவரை கண்டவுடன் சுட்டுக் கொலை செய்வோருக்கு ரூ11 லட்சம் எங்களது பூர்வாஞ்சல் சேனா வழங்கும். எங்களது தாய்நாட்டை இழிவுபடுத்தியிருக்கிறார் கன்னையாகுமார். தேசவிரோத முழக்கங்களை எழுப்பியிருக்கிறார். ஆகையால் அவரை சுட்டுக் கொல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.