ஆர்எஸ்எஸ் நிர்வாகி படுகொலை எதிரொலி.. கேரள முதல்வரின் கொடும்பாவி எரிப்பு
ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராஜேஷ் படுகொலையைக் கண்டித்து கேரளா முதல்வர் பினராயி விஜயனின் உருவபொம்மையை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கடந்த வாரம் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியதாக கேரளா முதல்வர் பினராயி விஜயனின் உருவபொம்மையை இந்து அமைப்புகள் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜேஷ் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தும், கேரளாவில் நடந்து வரும் அரசியல் படுகொலைகளை கண்டித்தும் களியக்காவிளையில் நேற்று மாலை இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் தலைமை தாங்கினார். தென் கேரள ஆர்.எஸ்.எஸ். கோட்ட பொறுப்பாளர் பத்மகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பாஜக மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேரள முதல்வர் பினராயி விஜயனின் உருவபொம்மையை எரித்து கோஷம் எழுப்பினர். மேலும் களியக்காவிளை பஸ் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற 2 அரசு பஸ்களையும் அவர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் உருவப் பொம்மையில் எரிந்த தீயை அணைத்து அதனை கைப்பற்றினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து கேரள அரசு பஸ்களை மீட்டு திருவனந்தபுரத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இந்து அமைப்பினரின் போராட்டத்தால் களியக்காவிளையில் நேற்று கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்த போராட்டங்கள் குறித்து சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன், களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் கங்காதரன், மாவட்ட தலைவர் மிசா சோமன், பாஜக கோட்ட பொறுப்பாளர் தர்மராஜ், தென் கேரள ஆர்.எஸ்.எஸ். கோட்ட பொறுப்பாளர் பத்மகுமார், பி.எம்.எஸ் மாவட்ட செயலாளர் வினோத் குமார் உள்பட 405 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.