பினராயி தலையை கொண்டு வாங்க...ரூ. 1 கோடி தர்றேன்... ஆர்எஸ்எஸ் பிரமுகர் பேச்சால் சர்ச்சை
கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலையைக் கொண்டு வாருங்கள், எனது சொத்தை விற்றாவது ரூ.1 கோடியை பரிசாக தருகிறேன் என்று மத்தியப் பிரதேச மாநில ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் பேசியதால் பரபரப்பு எழுந்துள்ளது.
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கொல்லப்படுவதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் முதல்வர் பினராயி விஜயனின் தலையைக் கொண்டு வாருங்கள், ரூ.1 கோடி பரிசு தருகிறேன் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் குண்டன் சந்திரவாட் தெரிவித்தார்.
கேரள மாநிலத்தில் ஆர்எஸ்எஸ், பாஜக தொண்டர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்கள் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகின்றன. இதற்கு மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரே காரணம் என்று கூறப்படுகிறது. தேர்தல் முன்விரோதம் காரணமாக தங்கள் கட்சியினரை ஆளும் கட்சி தொண்டர்கள் தாக்கி படுகொலை செய்வதாக அவ்வப்போது பாஜக தரப்பில் இருந்து புகார் கூறுவதுண்டு.
கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபடுவதுண்டு. கடந்த சில மாதங்களாக இந்தக் கொலைகள் அதிகரித்துள்ளன. இதைக் கண்டித்து கேரள மாநிலம், ஷாஹீத் பூங்காவில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மத்தியப் பிரதேசம், உஜ்ஜயினி எம்.பி. சிந்தாமண் மால்வியா, பாஜக எம்எல்ஏ மோகன் யாதவ் மற்றும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் குண்டன் சந்திரவாட் பேசுகையில், கேரள மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்காமல் பினராயி ராஜன் வேடிக்கை பார்த்து வருகிறார்.
எங்கள் தொண்டர்கள் 300 பேரை இழந்துள்ளோம். முதல்வரின் சொந்த தொகுதியான கண்ணனூரில் எங்கள் அமைப்பினர் அதிகமாக கொல்லப்படுகின்றனர். இதைத் தடுக்காத முதல்வர் பினராயி விஜயனின் தலையை கொண்டு வாருங்கள். எனக்கு நிறைய சொத்துகள் உள்ளன, அதை விற்றாவது ரூ. 1 கோடியை பரிசாக தருகிறேன் என்றார் அவர்.
இந்த பேச்சால் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பக் கூடும் என்கிற போதிலும், அவர் தனது கருத்தை திரும்ப பெறாமல் உள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்எஸ்எஸ் விளக்கம்
குண்டனின் சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து ஆர்எஸ்எஸ் பிரமுகர் ரத்னாதீப் நிகாம் கூறுகையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் குண்டன் சந்திரவாட் தனிப்பட்ட முறையில் கலந்து கொண்டார். பேச்சுரிமையை பயன்படுத்தி அவர் பேசியுள்ளார். அவரது கருத்தானது ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ கருத்து அல்ல. வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார் அவர்.