உ.பி..யில் ஆர்.எஸ்.எஸ்.-ன் ராணுவ பள்ளி... 160 மாணவர்களுடன் ஏப்ரல் முதல் தொடக்கம்
மீரட்: உத்தரப்பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ராணுவ பள்ளி வரும் கல்வியாண்டு முதல் தொடங்க உள்ளது. முதல் கட்டமாக 6-ம் வகுப்பில் 160 மாணவர்களுடன் இப்பள்ளி இயங்க உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கல்விபிரிவு வித்யா பார்தி. இந்த அமைப்பு முதல் முறையாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் ராணுவ பயிற்சி அளிக்கும் பள்ளியை தொடங்கி உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜூ பையா நினைவாக ராஜூ பையா சைனிக் வித்யா மந்திர் என்ற பெயரில் இப்பள்ளி தொடங்கப்படுகிறது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உண்டு உறைவிட பள்ளியாக இது செயல்படும்,.
ராணுவ வீரர்களின் குழந்தைகள் 56 பேர் இடஒதுக்கீடு அடிப்படையில் இப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு ராணுவ பயிற்சி அளிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவர்களை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு ராணுவ கல்வி அவசியம் என்பதை வலியுறுத்துகிறது ஆர்.எஸ்.எஸ். 1937-ம் ஆண்டே ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவரான மூஞ்சே இத்தகைய பள்ளிகளை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.